உத்தரப் பிரதேசம், சீதாப்பூர் மாவட்டத்தை சேர்ந்த மெராஜ் என்பவர், தனது மனைவி நசீமுன் இரவில் பாம்பாக மாறி தன்னை கடிக்க துரத்துவதாக மாவட்ட ஆட்சியரிடம் எழுத்துபூர்வமாக புகார் அளித்தது அதிகாரிகளை திகைக்க வைத்தது.
பொது குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் பேசிய மெராஜ், தனது மனைவி பலமுறை தன்னை கொல்ல முயன்றதாகவும், இது மனதளவில் தன்னை துன்புறுத்துவதாகவும் அச்சம் தெரிவித்தார். மேலும், பாம்பாக மாறிய நிலையில் அவர் ஏற்கெனவே ஒருமுறை தன்னை கடித்ததாகவும் கூறியுள்ளார்.
இந்த வினோத புகாரைக் கேட்டு அதிர்ச்சியடைந்த மாவட்ட ஆட்சியர், உடனடியாக சார்பாட்சியர் மற்றும் காவல்துறைக்கு விசாரணைக்கு உத்தரவிட்டார். காவல்துறையினர் இந்த வழக்கை 'உளவியல் துன்புறுத்தல்' தொடர்பான சாத்தியமான வழக்காக கருதி விசாரித்து வருகின்றனர்.
இந்தச் செய்தி சமூக வலைதளங்களில் பரவியதையடுத்து, பயனர்கள் 1986-ஆம் ஆண்டு ஸ்ரீதேவி நடித்த 'நாகினா' திரைப்படத்தை ஒப்பிட்டு, நகைச்சுவையாக கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.