காத்திருக்கும் இந்திய சிறை – விஜய் மல்லையா வழக்கில் இன்று தீர்ப்பு !

திங்கள், 10 டிசம்பர் 2018 (08:51 IST)
இலண்டனில் சென்று அடைக்கலம் அடைந்துள்ள இந்தியத் தொழிலதிபர் விஜய் மல்லையாவின் மீதான முக்கிய வழக்கில் லண்டன் நீதிமன்றம் இன்று தீர்ப்பளிக்க உள்ளது.

பல்வேறு பொதுத் துறை வங்கிகளில் 9 ஆயிரம் கோடி ரூபாய் கடன் வாங்கிவிட்டு அதைத் திருப்பி கட்டாமல் லண்டனுக்குத் தப்பியோடினார் கிங் ஃபிஷர் நிறுவன முதலாளி விஜய் மல்லையா.இதனால் இந்திய வங்கிகளின் நிதிநிலை பெரிதாகப் பாதிக்கப்பட்டது. இதனால் அவர் மீது பலப் பிரிவுகளில் வழக்குத் தொடரப்பட்டு தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார்.

அவரின் மீதான வழக்கைத் தற்போது சி பி ஐ விசாரித்து வருகிறது. மேலும் லண்டலிலும் அவர் மீது வழக்குத் தொடரப்பட்டு நடைபெற்று வருகிறது. அவரது 13,900 கோடி சொத்துகளையும் அமலாக்கப்பிரிவு முடக்கியுள்ளது. இந்நிலையில் இந்தியாவுக்கு வரமறுக்கும் அவரை தலைமறைவு பொருளாதாரக் குற்றவாளி என அறிவிக்க வேண்டுமென அமலாக்கப் பிரிவு மும்பை நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளது.

லண்டனில் பதுங்கியுள்ள இவரை இந்தியாக் கொண்டு வருவதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ள சிபிஐ  விஜய்  மல்லையாவை இந்தியாவுக்கு நாடு கடத்துவது தொடர்பாக, இந்தியா தரப்பில் லண்டன் வெஸ்ட்மினிஸ்டர் மாஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.  இந்த வழக்கு விசாரணை கடந்த ஓராண்டாக நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் சிபிஐ, மத்திய அமலாக்கத் துறை ஆகியவை ஒன்றிணைந்து நீதிமன்றத்தில் விஜய் மல்லையாவுக்கு எதிராக 150 பக்கங்கள் கொண்ட ஆவணங்களைத் தாக்கல் செய்துள்ளன.

இந்த வழக்கின் கடைசி கட்ட விசாரணை இன்றோடு முடிவடைந்து தீர்ப்பளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.. தீர்ப்பு இந்தியத் தரப்புக்குச் சாதகமாக வரும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் சிபிஐ, அமலாக்கத் துறை அதிகாரிகள் நேற்று லண்டன் சென்றுள்ளனர். தீர்ப்பு இந்தியாவுக்கு சாதகமாக வரும் பட்சத்தில் விஜய் மல்லையா கைது செய்யப்பட்டு இந்தியா கொண்டு வரப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்