மூன்றாவது வழக்கில் லாலு பிரசாத்திற்கு 5 வருடங்கள் சிறை தண்டனை

புதன், 24 ஜனவரி 2018 (14:22 IST)
பீகார் மாநில முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவ், மீது கால்நடைத் தீவன ஊழல் தொடர்பாக பதியப்பட்ட ஐந்து வழக்குகளில் மூன்றாவது வழக்கிலும் அவர் குற்றவாளி என  அறிவித்து அவருக்கு ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து ராஞ்சி சிபிஐ நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 
பீகார் முன்னாள் முதல்வர்கள் லாலு பிரசாத் மற்றும் ஜகன்நாத் மிஸ்ராவும் ஆட்சியில் இருந்த போது கால்நடைத் தீவனம் வாங்கியதில், அரசு கருவூலத்தில் இருந்து 960 கோடி ரூபாய் முறைகேடு செய்ததாக, அவர்கள் மீது சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் மொத்தம் 5 வழக்குகள் வழக்கு பதிவு செய்யப்பட்டன. 
 
இரண்டு வழக்குகளில் அவர்மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதால், முதல் வழக்கில் 5 வருடங்களும், இரண்டாவது வழக்கில் 3.5 வருடங்களும் சிறைதண்டனை வழங்கி ராஞ்சியிலுள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பளித்தது. லாலு மீதான சாய்பாஸா மாவட்டத்தில் உள்ள அரசு கருவூலத்தில் இருந்து ரூ.33.67 கோடி ஊழல் செய்தது, டோரன்டா மாவட்ட அரசு கருவூலத்தில் இருந்து ரூ.184 கோடி ஊழல், தும்கா மாவட்ட அரசு கருவூலத்தில் இருந்து ரூ.3.97 கோடி ஊழல் ஆகிய மூன்று வழக்குகளையும் சிபிஐ விசாரித்து வந்தது.
 
இந்நிலையில் லாலு மீதான மூன்றாவது வழக்கின் தீர்ப்பு இன்று (ஜனவரி 24) வெளியிடப்படும் அன அறிவிக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து லாலு மீதான மூன்றாவது குற்றச்சாட்டும் நிரூபிக்கப்பட்டதால், லாலு பிரசாத் மற்றும் ஜகன்நாத் மிஸ்ராவுக்கு ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து ராஞ்சி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்