கொல்கத்தாவில் உள்ள சட்டக் கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக கூறப்படும் வழக்கில், முக்கிய குற்றவாளியாகக் குற்றம் சாட்டப்பட்ட மனோஜித் மிஷ்ராவின் வழக்கறிஞர் உரிமத்தை, மேற்கு வங்க பார் கவுன்சில் ரத்து செய்துள்ளது. இதனால் அவர் இனி சட்டப்பயிற்சி செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
கடந்த ஜூலை 2 ஆம் தேதி நடைபெற்ற பெங்கால் பார் கவுன்சில் கூட்டத்தில், வழக்கறிஞர்கள் பட்டியலில் இருந்து மனோஜித் மிஷ்ராவின் பெயரை நிரந்தரமாக நீக்குவது என்றும், இந்த முடிவை மத்திய பார் கவுன்சிலுக்கும் தெரிவிப்பது என்றும் ஒருமனதாக முடிவெடுக்கப்பட்டது. இந்த நடவடிக்கையின் விளைவாக, மிஷ்ரா இனி மாநிலத்தின் எந்த நீதிமன்றத்திலும் எந்தவொரு வழக்கிலும் வாதாட முடியாது.
கொல்கத்தா சட்டக் கல்லூரி மாணவியின் பாலியல் வன்கொடுமை வழக்கு, நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ள நிலையில் பார் கவுன்சில் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த சம்பவம் தொடர்பாக வழக்கறிஞர் மனோஜித் மிஷ்ரா உட்பட மொத்தம் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், இந்த வழக்கை கொல்கத்தா காவல்துறையின் துப்பறியும் துறைக்கு மாற்றி, மேலதிக விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.
முக்கியக் குற்றவாளியான மிஷ்ரா, திரிணாமுல் காங்கிரஸ் மாணவர் கவுன்சிலில் (TMCP) ஒரு முக்கியப் பொறுப்பில் இருந்ததாகவும், அலிப்பூர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பயிற்சி செய்து வந்ததாகவும் கூறப்படுகிறது.