கத்தியைக் காட்டி மிரட்டி 100 பேரை காப்பாற்றிய கேரள இளைஞர்கள்

சனி, 25 ஆகஸ்ட் 2018 (12:09 IST)
கேரள வெள்ளத்தின் போது தங்களது சொந்த வீட்டிலிருந்து வெளியே வர மறுத்தவர்களை இளைஞர்கள் இரண்டு பேர், கத்தியைக் காட்டி மிரட்டி வெளியே கொண்டுவந்து அவர்களின் உயிரைக் காப்பாற்றியுள்ளனர்.
கேரள மாநிலத்தில் கனமழை பெய்து வெள்ள பாதிப்பு ஏற்பட்டது. வெள்ளத்தில் பொதுமக்கள் பலரும் தங்களது உடமைகளை இழந்து தவித்தனர். 350க்கும் மேற்பட்டோர் பரிதாபமாக உயிரிழந்தனர். லட்சக்கணக்கானோர் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
 
இந்தியா முழுவதும் கேரள மாநிலத்துக்கு வெள்ள நிவாரண நிதி வழங்கப்பட்டு வருகிறது. அதே போல் அத்தியாவசப் பொருட்களான அரிசி, பருப்புவகைகள், காய்கறிகள், பிரட் பாக்கெட்டுக்கள், நாப்கின், துணிமணிகள், உள்ளாடைகள், பெட்ஷிட்கள் என அனைத்தும் வழங்கப்பட்டன. தற்பொழுது கேரளாவில் நிலைமை சீராகி வருகிறது
இந்நிலையில் கேரள வெள்ளத்தின் போது நடைபெற்ற ருசிகர சம்பவம் தற்பொழுது தெரிய வந்துள்ளது.
 
கேரளாவில் கனமழையின் காரணமாக வீடுகளில் வெள்ள நீர் சூழ்ந்த போது, பலர் தங்களது சொந்த வீட்டை விட்டு வெளியேற மறுத்தனர். அவர்களை மீட்பதற்கு மீட்புத் துறையினர் சிரமப்பட்டனர்.
 
அப்போது தன்னார்வளர்களான  பாபு நம்பூதிரி, கோபகுமாரன் ஆகியோர் வீட்டிலிருந்தவர்களை கத்திமுனையில் மிரட்டி அவர்களை படகில் அழைத்து வந்து மீட்டனர். 
 
இந்த செயல்முறை தவறாக இருந்தாலும் கூட, அந்த நேரத்தில் சரியாக சிந்தித்து அவர்கள் இருவரும் 100க்கும் மேற்பட்டோரை அபாயத்திலிருந்து காப்பாற்றினார்கள். அவர்களுக்கு பலர் தங்களது பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்