காம்ரேடுகளோடு கை கோர்த்த காங்கிரஸ்! – மத்திய அரசுக்கு எதிராக கேரளா!

சனி, 14 டிசம்பர் 2019 (17:16 IST)
மத்திய அரசின் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக கேரளாவின் அனைத்து கட்சிகளும் ஒருங்கிணைந்த போராட்டத்தை அறிவித்துள்ளன.

இந்திய குடியுரிமை சட்ட திருத்த மசோதாவுக்கு பல எதிர்ப்புகள் எழுந்த நிலையிலும் பெரும்பான்மை பெற்றுள்ள மத்திய பாஜக அரசு அதை இரு அவைகளிலும் வெற்றிகரமாக நிறைவேற்றியது. இதனால் எதிர்கட்சிகள் கடும் போராட்டத்தை தொடங்கியுள்ளன. இதுதவிர அசாம் உள்ளிட்ட மாநிலங்களில் புதிய குடியுரிமை சட்டத்திற்கு எதிராக மக்களே போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.

அசாமில் ஏற்பட்டுள்ள போராட்டத்தை அடக்க இராணுவம் களம் இறக்கப்பட்டுள்ளது. இதனால் போராட்டம் வன்முறையாக வெடித்தது. வாகனங்கள் கொளுத்தப்பட்டன. கலவரத்தை அடக்க நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில் 3 பேர் பலியானார்கள்.

மத்திய அரசின் புதிய குடியுரிமை சட்டத்தை கேரளாவில் அமல்படுத்த முடியாது என கேரள முதல்வர் பினராயி விஜயன் ஏற்கனவே அறிவித்துள்ளார். இந்நிலையில் மத்திய அரசின் அதிகார போக்கான செயல்பாட்டையும், குடியுரிமை சட்டத்தையும் எதிர்த்து கேரளாவில் அனைத்து கட்சி போராட்டம் நடைபெற இருக்கிறது.

டிசம்பர் 16ல் கேரளா முழுவதும் நடைபெற இருக்கும் இந்த போராட்டத்தில் ஆளும் சிபிஎம் கட்சியும், எதிர்கட்சியான காங்கிரஸும் இணைந்து போராட உள்ளன. மத்திய அரசுக்கு எதிராக மாநிலத்தின் ஆளுங்கட்சி மற்றும் எதிர்கட்சி ஆகியவை இணைந்து போராடுவது மற்ற மாநிலங்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

இந்த போராட்டம் குறித்து பேசிய கேரள முதல்வர் பினராயி விஜயன் “மத்திய அரசு சாவர்க்கர் மற்றும் கோல் வாக்கரின் பிரித்தாளும் கொள்கையை இந்திய மண்ணில் நிறுவிட முயல்கிறது. அதற்கு ஒருபோதும் நாங்கள் பணிய மாட்டோம்” என தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்