கொலை செய்வது எப்படி என்ற யூடியூப் வீடியோவை பார்த்து, அதில் கூறிய வழிமுறையின்படி தனது கணவரை இரண்டு நண்பர்களுடன் சேர்ந்து கொன்ற மனைவி, தற்போது காவல்துறை விசாரணைக்கு பிறகு கைது செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் தெலங்கானாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தெலங்கானா மாநிலத்தை சேர்ந்த ரமாதேவி என்பவர், தனது கணவரை கொல்ல திட்டமிட்டுள்ளார். இதற்காக, அவர் யூடியூபில் "கொலை செய்வது எப்படி" என்று தேடியுள்ளார். அப்போது, ஒரு நபரின் காதில் பூச்சிக்கொல்லி மருந்தினை ஊற்றினால் உடனடியாக மரணம் ஏற்படும் என்ற தகவலை ஒரு வீடியோ மூலம் அவர் அறிந்துள்ளார்.
இந்தத் தகவலை தனது நண்பர்களான ராஜய்யா மற்றும் சீனிவாஸ் ஆகிய இருவரிடமும் ரமாதேவி பகிர்ந்துள்ளார். இதையடுத்து, மூவரும் சேர்ந்து ரமாதேவியின் கணவரான சம்பத்தை கொல்லத் திட்டமிட்டனர். ஒருநாள், ராஜய்யாவும் சீனிவாஸும் மது அருந்துவதற்காக ரமாதேவி கணவர் சம்பத்தை அழைத்து சென்றுள்ளனர். சம்பத் அதிக மது போதையில் இருந்தபோது, அவரது காதில் பூச்சிக்கொல்லி மருந்தை ஊற்றியுள்ளனர். இதனால், சம்பத் உடனடியாக உயிரிழந்தார்.
மறுநாள், ரமாதேவி, தனது கணவரை காணவில்லை என்று காவல்துறையில் புகார் அளித்துள்ளார். இரண்டு நாட்களுக்கு பிறகு சம்பத்தின் உடல் கண்டெடுக்கப்பட்டது. அப்போது, பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் என்று காவல்துறையினர் கூறியபோது, ரமாதேவி அதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதுவே காவல்துறைக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது.
சந்தேகத்தின் பேரில் ரமாதேவியை விசாரித்தபோது, அவர் தனது இரண்டு நண்பர்களுடன் சேர்ந்து கணவரை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். தற்போது, ரமாதேவி, ராஜய்யா, சீனிவாஸ் ஆகிய மூவரும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.