மதம் தாண்டிய காதல்; மதம் பிடித்தவர்கள் செய்த ஆணவக் கொலை! – ஐதராபாத்தில் அதிர்ச்சி சம்பவம்!

வெள்ளி, 6 மே 2022 (09:02 IST)
ஐதராபாத்தில் மதம் மாறி திருமணம் செய்த கொண்ட விவகாரத்தில் பெண்ணின் சகோதரர்கள் அவரது கணவனை அடித்துக் கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தெலுங்கானா மாநிலம் ரங்காரெட்டி பகுதியை சேர்ந்தவர் நாகர்ஜுனா. இவரும் ஹனபூர் கிராமத்தை சேர்ந்த இஸ்லாமிய பெண்ணான அஷ்ரின் சுல்தானாவும் பள்ளி படிக்கும் காலத்திலிருந்தே ஒருவரை ஒருவர் காதலித்து வந்துள்ளனர்.

இந்த விவகாரம் இருவர் வீட்டிலும் தெரிய வர திருமணத்திற்கு பெண்ணின் வீட்டார் மறுத்துள்ளனர். இதனால் வீட்டின் எதிர்ப்பை மீறி சுல்தானா, நாகர்ஜுனா இருவரும் கடந்த ஜனவரி மாதம் திருமணம் செய்து கொண்டுள்ளனர்.

பின்னர் சுல்தானா வீட்டினர் தங்களை ஏதேனும் செய்யக்கூடும் என கருதி அந்த ஊரை விட்டு தப்பி ஐதராபாத் சென்றுள்ளனர். அங்கு நாகர்ஜுனா ஒரு கார் ஷோ ரூமில் பணியாற்றி வந்துள்ளார்.

இந்த காதல் திருமண விவகாரத்தில் ஆத்திரத்தில் இருந்த சுல்தானாவின் சகோதரன் முகமது மசுத் இருவரையும் நீண்டகாலமாக தேடி வந்துள்ளார். அவர்கள் ஐதராபாத்தில் இருப்பது தெரிய வந்த நிலையில் அகமது என்பவருடன் ஐதராபாத் சென்றுள்ளார்.

அங்கு சரோன் நகர் பகுதியில் சாலையில் பைக்கில் சென்று கொண்டிருந்த நாகர்ஜுனா தம்பதியை வழிமறித்த முகமதுவும், அகமதுவும் நாகர்ஜுனாவை இரும்பு கம்பியால் பலமாக தாக்க தொடங்கியுள்ளனர்.

இதை கண்டு அலறிய சுல்தானா அவர்களை தடுக்க நினைத்தும் முடியவில்லை. சுற்று நின்று வேடிக்கை பார்த்தவர்களிடம் அவர் கெஞ்சி அழவே அவர்கள் முகமதுவையும், அகமதுவையும் பிடித்து அடித்துள்ளனர். ஆனால் அதற்குள் நாகர்ஜுனா பரிதாபமாக சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதுகுறித்து தகவலறிந்த போலீஸார் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து கொலையாளிகள் இருவரையும் கைது செய்தனர். நட்ட நடு ரோட்டில் நடந்த இந்த ஆணவக் கொலை சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்