அகமதாபாத்தில் ஏற்பட்ட விமான விபத்து, நாடெங்கும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் விபத்துக்குள்ளான விமானத்தில் முன்னாள் குஜராத் முதல்வர் விஜய் ரூபாணி பயணித்ததாக பரவும் தகவல், பரபரப்பை அதிகரித்திருக்கிறது.
ஏர் இந்தியா நிறுவனம் இயக்கிய AI171 என்ற விமானம், அகமதாபாத்திலிருந்து லண்டனை நோக்கி புறப்பட்டது. புறப்பட்ட சில நிமிடங்களிலேயே அதாவது மதியம் 1:38 மணியளவில், விமானம் மேகானி நகர் மற்றும் கோடா முகாம் பகுதிக்குள் உள்ள ஒரு குடியிருப்பு மாடிகட்டிடத்தின் மேல் விழுந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. விபத்துக்கு பின் அந்த இடம் கரும்புகையால் சூழப்பட்டது.
விபத்து தகவல் வெளியாகியவுடன், பிரதமர் நரேந்திர மோடி, உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளதாகவும், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, மாநில அரசுக்கு தேவையான உதவிகளை வழங்குவதாக உறுதி அளித்ததாகவும் செய்திகள் வெளியாகின.