ஐஏஎஸ் பயிற்சி மைய உயிரிழப்பு வழக்கு: சிபிஐக்கு மாற்றம்!

Mahendran

சனி, 3 ஆகஸ்ட் 2024 (09:13 IST)
சமீபத்தில் ஐஏஎஸ் பயிற்சி மையத்தில் வெள்ளம் புகுந்ததால் ஏற்பட்ட உயிரிழப்பு டெல்லியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இது குறித்த வழக்கை இதுவரை டெல்லி போலீசார் விசாரணை செய்து வந்த நிலையில் தற்போது இந்த வழக்கு சிபிஐக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

டெல்லியில் ராஜேந்திர நகர் என்ற பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஐஏஎஸ் பயிற்சி மையத்தின் தரைத்தளத்தில் திடீரென வெள்ளம் புகுந்தது. இதில் மூன்று மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்த நிலையில் இது குறித்து வழக்கு விசாரணை செய்யப்பட்டது.

இந்த நிலையில் இந்த வழக்கு விசாரணையை டெல்லி உயர்நீதிமன்றம் சிபிஐக்கு மாற்றி உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த விசாரணையில் பொதுமக்களுக்கு சந்தேகம் வரக்கூடாது என்பதற்காகவும் சம்பவங்களின் தீவிர தன்மை மற்றும் அரசு ஊழியர்கள் ஊழலில் ஈடுபட்டதற்கான சாத்தியக்கூறுகள் இருக்கலாம் என்ற காரணமாகவும் சிபிஐக்கு இந்த வழக்கை மாற்றி, விசாரணை செய்ய உத்தரவிட்டதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.

ஐஏஎஸ் பயிற்சி மையம் தரைத்தளத்தில் இயங்குவது ஏன்? இந்த பயிற்சி மையத்துக்கு வழங்கிய லைசென்சில் ஏதேனும் முறைகேடு நடந்துள்ளதா?  பயிற்சி மையத்தில் போதுமான பாதுகாப்பு வசதிகள் இருந்ததா? என்பதை எல்லாம் சிபிஐ விசாரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Edited by Mahendran
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்