உத்தரபிரதேச மாநிலத்தில், திடீரென ஒரு முதலை வீட்டுக்குள் புகுந்த நிலையில், வீட்டில் உள்ளவர்கள் அலறி அடித்து, ஆளுக்கு ஒரு பக்கம் சென்றனர். அந்த நேரத்தில், ஒரு தைரியமான இளைஞர் ஒரு கயிற்றை எடுத்து, அந்த முதலையை முதல் மாடியில் இருந்து கட்டி தூக்கியவாறு உள்ள வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
உத்தரபிரதேசம் மாநிலத்தில் உள்ள மகாராஜ்கஞ்ச் என்ற பகுதியில் உள்ள ஒரு கிராமத்தில், திடீரென ஒரு முதலை வீட்டின் கதவருகே வந்து கதவை தட்டி, கதவில் உரசியது. இதனைத் தொடர்ந்து, அந்த வீட்டில் உள்ளவர்கள் அலறி அடித்து ஓடினர். ஆனால், முதல் மாடியில் இருந்து ஒரு இளைஞர் கயிறை எடுத்து, முதலையின் கழுத்தை இறுக்கி, அப்படியே தூக்கினார்.
இதனை அடுத்து, வனத்துறைக்கு தகவல் அளிக்கப்பட்ட நிலையில், வனத்துறையினர் விரைந்து வந்து முதலையை மீட்டனர். இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்று கூறப்படுகிறது.
இந்த கிராமத்தின் அருகில் உள்ள ஏரியில் இருந்து தான் இந்த முதலை வந்திருக்கலாம் என்றும், வெயில் காலம் என்பதால் வெளியே வந்த முதலைகள் கிராம பக்கம் வந்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. ஏற்கனவே சில பகுதிகளில், அவ்வப்போது முதலை நடமாட்டம் இருந்து வருவதாக அந்த பகுதி மக்கள் கூறி வருகின்றனர்.
இருப்பினும், முதலையை துணிச்சலுடன் கயிறு கட்டி தூக்கிய அந்த வாலிபருக்கு, அந்த பகுதி மக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.