அமித்ஷா மீது நடவடிக்கை எடுக்க முதல்வர் ஸ்டாலினுக்கு தைரியம் இருக்கிறதா? தம்பிதுரை

Mahendran

வியாழன், 17 ஏப்ரல் 2025 (12:46 IST)
திமுக ஆட்சி மீது ஊழல் குற்றச்சாட்டுகளை நேரடியாக கூறிய அமைச்சர் அமித்ஷா மீது நடவடிக்கை எடுக்க முதல்வர் ஸ்டாலினுக்கு தைரியம் இருக்கிறதா என அதிமுக எம்பி தம்பிதுரை கேள்வி எழுப்பி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
 
தீரன் சின்னமலை திருவுருவப்படத்திற்கு அதிமுக பொதுச்செயலாளர் இன்று மலர் தூவி மரியாதை செலுத்திய நிலையில், இந்த நிகழ்ச்சியில் அதிமுக எம்பி தம்பிதுரை கலந்து கொண்டார்.
 
அப்போது அவர் செய்தியாளர்களிடம் பேசிய போது, தீய சக்தியான திமுகவை ஒழிக்க வேண்டும் என்பதால்தான் பாஜகவுடன் கூட்டணி வைத்ததாகவும், வாஜ்பாய் ஆட்சியில் அதிமுக இடம்பெற்று அதன்பின் அதிமுக வெளியே வந்தவுடன் திமுக வாஜ்பாய் ஆட்சியில் கூட்டணி அமைத்தது. அப்போது அது பொருந்தா கூட்டணியாக தெரியவில்லையா என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
 
சந்தர்ப்பவாத கூட்டணி அமைப்பது திமுகவின் கொள்கை என்றும், மக்கள் நலனுக்காக ஜெயலலிதா எப்படி பாஜகவுடன் கூட்டணி அமைத்தாரோ, அதேபோல் தான் எடப்பாடி பழனிச்சாமியும் பாஜகவுடன் கூட்டணி அமைத்துள்ளார்.
 
திமுக ஆட்சியின் ஊழல் குறித்து அமித்ஷா பேசியதற்கு முதல்வர் ஸ்டாலின் இதுவரை பதில் கூறவில்லை, ஒருவேளை அவர் கூறியது உண்மையில்லை என்றால், அவர் மீது சட்ட நடவடிக்கை எடுக்க முதல்வர் ஸ்டாலினுக்கு தைரியம் இருக்கிறதா என்ற கேள்வியையும் அவர் எழுப்பினார்.
 
மேலும், இதுவரை தமிழகத்தில் கூட்டணி ஆட்சி அமைக்கவில்லை என்றும், இனி மேலும் கூட்டணி ஆட்சி இல்லை என்றும், 2026 தேர்தலில் அதிமுக கூட்டணி வெற்றி பெற்றாலும் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அதிமுக ஆட்சி தான் அமையும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

Edited by Mahendran
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்