குட்டையை குழப்பிய சிவசேனா: நாற்காலிக்கு பிளான் போடும் காங்கிரஸ்!

வெள்ளி, 1 நவம்பர் 2019 (15:58 IST)
மஹாராஷ்டிராவில் பாஜக ஆட்சி அமைப்பதா? சிவசேனா ஆட்சி அமைப்பதா? என இழுபறி நீடித்து வரும் நிலையில் குறுக்கே புகுந்து ஆட்சியை பிடிக்க காங்கிரஸ் திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது.

மஹாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் பாஜக – சிவசேனா கூட்டணி அமோக வெற்றி பெற்றது. ஆனாலும் பாஜகவுக்கு பெரும்பானமி கிடைக்காத நிலையில் சுயேட்சை வேட்பாளர்களை இணைத்து கொள்ள முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில் கூட்டணி கட்சியான சிவசேனா ஆட்சியமைப்பத்தில் குழப்பத்தை ஏற்படுத்தி வருவதால், இந்த சூழலை காங்கிரஸ் பயன்படுத்தி கொள்ள நினைப்பதாக தெரிகிறது.

சிவசேனா கட்சியினர் ஆதித்ய தாக்கரேவை முதலைமைச்சர் ஆக்க வேண்டும் என்பதில் திட்டவட்டமாக இருக்கின்றனர். மராட்டியத்தில் சிவசேனா கட்சியை வலுப்படுத்த இது மிகவும் அவசியம் என அவர்கள் நினைக்கின்றனர். பாஜக துணை முதல்வர் பதவி அளிப்பதாக கூறியும் சிவசேனா அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை என கூறப்படுகிறது.

இந்த பூசல் நிலையை பயன்படுத்தி கூட்டணி கட்சிகளோடு சுயேட்சை வேட்பாளர்களை இணைத்து ஆட்சியை அமைக்க காங்கிரஸ் வியூகம் அமைத்து வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் முன்னாள் மகாராஷ்டிர முதல்வரான அசோக் சவான் காங்கிரஸ் மூத்த உறுப்பினர் கே.சி. வேணுகோபாலை சந்தித்து பேசியுள்ளார்.

இதுகுறித்து பேசிய அவர் “மஹாராஷ்டிர அரசியலில் நடைபெற்று வரும் குழப்பமான சூழலை கவனித்து வருகிறோம். சரியான நேரத்தில் சரியான முடிவு எடுப்போம்” என கூறியுள்ளார்.

இதனால் தற்போது மஹாராஷ்டிராவில் ஆட்சியமைப்பது பாஜகவா? சிவசேனாவா? என்பதை தாண்டி காங்கிரஸ் இடையே வந்துவிடலாம் என்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்