நேற்று அகமதாபாத் விமான விபத்தில், அதில் பயணம் செய்த ஒரு பயணியை தவிர 241 பேர் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், இன்று இன்னொரு ஏர் இந்தியா விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததால், அது அவசரமாக தரையிறக்கப்பட்டதாக கூறப்படுவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தாய்லாந்தில் இருந்து டெல்லி வந்து கொண்டிருந்த ஏர் இந்தியா விமானத்தில் திடீரென வெடிகுண்டு மிரட்டல் ஏற்பட்டது. அதை அடுத்து, அந்த விமானம் பாங்காங் விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. அதன் பின், பயணிகள் பத்திரமாக வெளியேற்றப்பட்டு, விமானம் முழுவதும் சோதனை செய்து பார்க்கப்படுவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த விமானத்தில் 156 பயணிகள் இருந்ததாகவும், விமான பறந்து கொண்டு இருந்தபோதுதான் திடீரென வெடிகுண்டு மிரட்டல் கிடைத்ததாகவும் கூறப்படுகிறது. இந்த விமானம் காலை 9:30 மணிக்கு தாய்லாந்தின் புக்கெட் விமான நிலையத்திலிருந்து டெல்லிக்கு புறப்பட்டது. ஆனால், அந்தமான் கடலை சுற்றி ஒரு பெரிய வட்டமிட்டு, மீண்டும் தாய்லாந்து தீவில் வெடிகுண்டு மிரட்டல் காரணமாக தரையிறங்கியது என்று கூறப்படுகிறது. இந்தச் சம்பவம் விமான பயணிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.