அகமதாபாத் விமான விபத்து: கருப்புப் பெட்டி மீட்பு; விபத்துக்கான காரணம் என்ன?

Siva

வெள்ளி, 13 ஜூன் 2025 (12:06 IST)
அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து லண்டனுக்குப் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம், புறப்பட்ட சில நிமிடங்களிலேயே விபத்துக்குள்ளானது. வெளிநாட்டு பயணிகள் உட்பட 242 பேர் பயணித்த இந்த விமானத்தில், முன்னாள் குஜராத் முதல்வர் விஜய் ரூபானி உட்பட 241 பேர் உயிரிழந்தனர். அதிர்ஷ்டவசமாக ஒருவர் மட்டும் உயிர் தப்பினார். மேலும் விமானம் மருத்துவக் கல்லூரி விடுதி கட்டிடத்தின் மீது விழுந்து வெடித்து சிதறியதால், அங்கிருந்த 10 மருத்துவ மாணவர்களும் பலியாகினர்.
 
விமான விபத்துக்கான காரணம் குறித்து விமானத்துறை நிபுணர்கள் கூறுகையில், "விமானம் புறப்பட தேவையான உந்து சக்தியை என்ஜின்கள் உருவாக்காதது அல்லது புறப்பட்ட சிறிது நேரத்தில் பறவை மோதியது போன்றவை காரணமாக இருக்கலாம். இரண்டு என்ஜின்களும் செயலிழந்திருக்கவே அதிக வாய்ப்புள்ளது. 
 
ஏனெனில், ஒரு என்ஜின் மட்டும் செயலிழந்திருந்தால் விமானம் அந்தரத்தில் தடுமாறியிருக்கலாம். ஆனால், இங்கு விமானம் நிலையாக இருந்தது. விமானம் புறப்பட்ட பிறகும், அதன் சக்கரங்கள் உள்ளிழுக்கப்படாததாலும் என்ஜின் செயலிழப்பு ஏற்பட்டிருக்கலாம்" என்று தெரிவித்தனர். விமான விபத்துகளுக்கான புலனாய்வு அமைப்பு  நடத்தும் விரிவான விசாரணைக்குப் பின்னரே உண்மையான காரணம் தெரியவரும்.
 
இந்த நிலையில் விபத்துக்குள்ளான விமானத்தின் கருப்புப் பெட்டி மீட்கப்பட்டு ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது. விமானிகள், ஊழியர்களின் உரையாடல்கள், விமானத்தின் வேகம், பறக்கும் உயரம், திசை, காலநிலை உள்ளிட்ட தகவல்களும் இந்த கருப்புப் பெட்டியில் பதிவாகியிருக்கும். பொதுவாக இரண்டு கருப்புப் பெட்டிகள் இருக்கும். விமானத்தின் பின் பகுதியில் இருந்த ஒரு கருப்புப் பெட்டி மீட்கப்பட்டுள்ள நிலையில், முன் பகுதியில் இருந்த மற்றொன்றைத் தேடும் பணி நடைபெற்று வருகிறது.
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்