பாராளுமன்ற தேர்தலுக்கு பிறகு ரூ.4,300 கோடி அதிக நிதி: 6 கட்சிகளின் நிதி ஆய்வு..!

Mahendran

திங்கள், 24 மார்ச் 2025 (13:01 IST)
கடந்த வருடம் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்ற நிலையில், தேர்தலுக்கு பின் அரசியல் கட்சிகள் தங்களது நிதி விவரங்கள், பிரசாரம், விளம்பரங்கள் உள்ளிட்ட செலவுகளை தேர்தல் ஆணையத்திற்கு சமர்ப்பித்தன.
 
இந்த செலவுகள், நிதி வரவுகளை ஆய்வு செய்தபோது பா.ஜ.க., தெலுங்கு தேசம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், எல்.ஜே.பி. (ராம்விலாஸ்), சிக்கிம் ஜனநாயக முன்னணி (எஸ்.டி.எப்.), அகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி (ஏ.ஐ.யூ.டி.எப்.) ஆகிய ஆறு கட்சிகளிடம் ரூ.4,300 கோடி அதிகமாக இருப்பதாக தெரியவந்துள்ளது.
 
இந்த தகவல்களை காமன்வெல்த் மனித உரிமைகள் முன்னணி (சி.எச்.ஆர்.ஐ.) இயக்குனர் வெங்கடேஷ் நாயக் மேற்கொண்ட ஆய்வில் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இந்த ஆய்வில், பா.ஜ.க., காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், ஆம் ஆத்மி, பகுஜன் சமாஜ் கட்சி, திரிணாமுல் காங்கிரஸ், தி.மு.க., தெலுங்கு தேசம், ஓய்.எஸ்.ஆர். காங்கிரஸ், சமாஜ்வாதி கட்சி, ஜனதா தளம் உள்ளிட்ட 22 கட்சிகள் 2024 நாடாளுமன்ற தேர்தல் மற்றும் நான்கு மாநில சட்டமன்ற தேர்தல்களுக்காக ரூ.11,326 கோடி தொடக்க இருப்பு வைத்திருந்ததாக கண்டறியப்பட்டுள்ளது.
 
தேர்தல் நடவடிக்கையின் போது, இந்த கட்சிகள் மொத்தம் ரூ.7,416 கோடி திரட்டியுள்ளன. அதில் ரூ.3,861.6 கோடி செலவிடப்பட்டுள்ளது. தேர்தல் முடிந்த போது கட்சிகளிடம் மொத்தமாக ரூ.14,848 கோடி இறுதி இருப்பாக இருந்தது.
 
ஆய்வின்படி, பா.ஜ.க. அதிகபட்சமாக ரூ.5,921.8 கோடி தொடக்க இருப்பு வைத்திருந்தது. காங்கிரஸ், தொடக்க நிதி அடிப்படையில் 22 கட்சிகளில் 9வது இடத்தையும், இறுதி இருப்பு அடிப்படையில் 12வது இடத்தையும் பிடித்தது.
 
இவ்வாய்வில் உள்ள 22 கட்சிகள் மொத்தமாக 1,595 வேட்பாளர்களை களமிறக்கின. இதில் 480 பேர் நாடாளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டனர். இந்த கட்சிகள் திரட்டிய மொத்த தொகையில் பா.ஜ.க. 84.5% பெற்றுள்ளது. மேலும், அந்தக் கட்சி தனது தேர்தல் செலவு ரூ.1,738 கோடி என அறிவித்துள்ளது, இது 22 கட்சிகளின் மொத்த செலவில் 45% ஆகும்.
 
ஊடக விளம்பரத்திற்காக 22 கட்சிகள் மொத்தம் ரூ.992.4 கோடி செலவிட்டுள்ளன. பொதுக்கூட்டங்களின் ஏற்பாடுகளுக்காக மட்டும் ரூ.130 கோடி பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்