ஃபரூக் அப்துல்லா குறித்து ஜம்மு காஷ்மீர் நிர்வாகம் பதில்…

Arun Prasath

திங்கள், 16 செப்டம்பர் 2019 (11:43 IST)
ஜம்மு காஷ்மீரின் முன்னாள் முதல்வர் ஃபரூக் அப்துல்லா எங்கிருக்கிறார் என்பது பற்றி வரும் 30 ஆம் தேதிக்குள் பதிலளிக்குமாறு உச்சநீதிமன்றம் மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ள நிலையில், தற்போது ஜம்மு காஷ்மீர் நிர்வாகம் பதிலளித்துள்ளது.

காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை நீக்கியதை தொடர்ந்து காஷ்மீரின் பலகட்சிகளை சேர்ந்த அரசியல் தலைவர்கள் வீட்டுச்சிறையில் வைக்கப்பட்டதாக கூறப்பட்டது. ஆனால் இவர்களுடன் காஷ்மீர் முன்னாள் முதல்வர் ஃபரூக் அப்துல்லா வீட்டுச் சிறையில் வைக்கப்படவில்லை என உள்துறை அமைச்சகம் தெரிவித்தது.

இதனையடுத்து  ஃபரூக் அப்துல்லாவை கண்டுபிடித்து தருமாறு, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, கடந்த 11 ஆம் தேதி உச்சநீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு ஒன்றை அளித்தார். அந்த மனுவில், ” அண்ணா மாநாட்டிற்கு, பல அரசியல் கட்சித் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஆனால் ஃபரூக் அப்துல்லாவை அழைக்க முடியவில்லை, அவர் எங்கே என்று தெரியவில்லை, எனவே அவரை கண்டுபிடித்து தரவேண்டும் என வைகோ கோரிக்கை வைத்தார்.

இதன் பிறகு  ஜம்மு காஷ்மீரின் முன்னாள் முதல்வர் ஃபரூக் அப்துல்லா எங்கிருக்கிறார் என்பது பற்றி வரும் 30 ஆம் தேதிக்குள் பதிலளிக்குமாறு உச்சநீதிமன்றம் மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக கூறப்பட்டது. இந்நிலையில் தற்போது ஃபரூக் அப்துல்லா மக்கள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் காவலில் வைக்கப்பட்டுள்ளதாக ஜம்மு காஷ்மீர் நிர்வாகம் பதிலளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் ஆகிய பகுதிகளை யூனியன் பிரதேசங்களாக பிரிப்பதற்கான எல்லை ஆய்வுகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்ததை முன்னிட்டு வீட்டு சிறையில் அடைக்கப்பட்ட அரசியல் தலைவர்களின் நிலை என்னவென்று தெரியாத நிலையில் தற்போது ஃபரூக் அப்துல்லாவை மக்கள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் காவலில் வைக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்