டெல்லியை அலற வைக்க தயாராகும் அதிமுக; பிரதமரை சந்திக்கும் எம்பிக்கள்: கிடைக்குமா காவிரி?

Webdunia
செவ்வாய், 4 அக்டோபர் 2016 (10:58 IST)
காவிரி விவகாரத்தில் நேற்று மத்திய அரசு நீதிமன்றத்தில் எடுத்த முடிவை தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் அனைவரும் இதற்கு தங்கள் எதிர்ப்பை தெரிவித்துள்ளனர்.


 
 
தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விட உச்ச நீதிமன்றம் மூன்று முறை உத்தரவிட்டும் கர்நாடக அரசு அதனை மதிக்கவில்லை. தண்ணீர் திறந்து விட மாட்டோம் என ஆணவமாக கூறி வருகிறது. மத்திய அரசும் அதனை கை கட்டி வேடிக்கை பார்க்கிறது.
 
உச்ச நீதிமன்றம் தனது கண்டனங்களை தெரிவித்தாலும், ஆட்சியாளர்கள் அதனை ஒரு பொருட்டாக மதிக்கவில்லை இந்த விவகாரத்தில். கர்நாடக் அரசு தான் தமிழகத்தை வஞ்சிக்கிறது என்றால் மத்திய அரசும் தனது பங்கிற்கு தமிழகத்தின் மீது அக்கறையில்லாத தனது முகத்தை காட்டியுள்ளது.
 
காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும் என காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பில் உள்ளது. இதனை இதற்கு முன்னர் இருந்த காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசும், தற்போது உள்ள பாஜக அரசும் அமைக்கவில்லை. இந்நிலையில் காவிரி பிரச்சனை தற்போது உச்சக்கட்டத்தை எட்டியுள்ளதால் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைத்து பிரச்சனைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
 
நான்கு வாரத்திற்குள் மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும் என உத்தரவிட்டது. கர்நாடகம் தமிழகத்துக்கு தற்போது திறந்து விட வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்ட தண்ணீரை திறந்து விடாததால் 3 நாட்களில் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க மத்திய அரசுக்கு உத்தரவிட்டது.
 
இந்நிலையில் நேற்று நடைபெற்ற காவிரி விவகாரம் தொடர்பான விசாரணையில் மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க முடியாது என்ற தனது நிலைப்பட்டை கூறியது. இது நீதிபதிகளையும், தமிழக மக்களையும் பெரும் அதிர்ச்சியடைய வைத்தது. காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க உத்தரவிடும் உரிமை இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு இல்லை என புதிதாக ஒரு பிரச்சனையை முன்வைத்து மத்திய அரசு தமிழக மக்களின் கண்ணீரை சம்பாதித்துள்ளது.
 
இந்நிலையில் காவிரி விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் மூலம் போராடி வந்த தமிழக அரசு தற்போது அரசியல் நெருக்கடி கொடுக்க வேண்டும் என்ற முடிவுக்கு வந்துள்ளது. காவிரி விவகாரத்தில் இந்நாள் வரை கர்நாடகா சார்பில் பல அரசியல் அழுத்தங்கள் கொடுக்கப்பட்டது. ஆனால் தமிழக அரசு நீதிமன்றத்தை மட்டுமே நம்பி இருந்தது.
 
இந்நிலையில் டெல்லியில் உள்ள அதிமுக மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்கள் அனைவரும் சேர்ந்து இன்று பிரதமரை சந்தித்து காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வலியுறுத்த உள்ளனர். நாடாளுமன்றத்தில் 48 எம்பிக்களுடன் மூன்றாவது பெரிய கட்சியாக உள்ள அதிமுக தங்கள் செல்வாக்கை இந்த விவகாரத்தில் பயன்படுத்த உள்ளதால் காவிரி விவகாரம் அனல் பறக்க போகிறது.
 
முக்கியமான விவகாரங்களில் மத்திய அரசுக்கு அதிமுக எம்பிக்களின் ஆதரவு கண்டிப்பாக தேவைப்படும், 48 எம்பிக்களின் கோரிக்கையை அவ்வளவு சீக்கிரமாக மத்திய அரசால் நிரகரிக்க முடியாது. அப்படி நிராகரித்தால் தமிழக எம்பிக்களின் எதிர்விணையை மத்திய அரசால் சமாளிப்பது கடினமே.
 
இவ்வளவு நாள் பொறுமையாக இருந்த தமிழக எம்பிக்கள் இந்த விவகாரத்தை நாடாளுமன்றத்தில் எழுப்பும் பட்சத்தில் நாடாளுமன்றத்தையே முடக்கும் வலிமை தமிழகத்துக்கு உள்ளது. இதனால் இன்று நடைபெற உள்ள இந்த சந்திப்பு முக்கியத்துவம் பெற்றுள்ளது.

தொடர்புடைய வீடியோ செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்
அடுத்த கட்டுரையில்