'எங்கே செல்கிறது நாடு’ - கேன்சர் நோயால் பாதிக்கப்பட்ட 90 வயது மூதாட்டி பாலியல் பலாத்காரம்!

Webdunia
வியாழன், 22 செப்டம்பர் 2016 (11:57 IST)
கேரள மாநிலம், கொல்லம் மாவட்டத்தில் கடக்கல் பகுதியில், தனது கணவரை இழந்து கடந்த 20 வருடங்களாக தனிமையில் வசித்துவருகிறார் கேன்சர் நோயால் பாதிக்கப்பட்ட ஒரு மூதாட்டி. 


 
 
இவரை, பாபு என்பவர் கத்திமுனையில் பாலியல் பலாத்காரம் செய்திருக்கிறார். இதுகுறித்து அந்த மூதாட்டி, கூறியதாவது, ‘‘அவன், பின் கதவு வழியாக வீட்டின் உள்ளே நுழைந்து, கத்தியைக் காட்டி மிரட்டி என்னைப் பலாத்காரம் செய்தான். ‘என்னைத் துன்புறுத்த வேண்டாம்’ என அவனிடம் வேண்டிக்கொண்டேன். ஆனால், அவன் கேட்கவில்லை’’ என்றார். இது குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து, அந்த மர்ம மனிதரை பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். 
 
இந்நிலையில், இந்தியாவில் பாலியல் பலாத்காரம் அதிக அளவில் நடந்து வருவது குறித்து உளவியல் நிபுணர் சித்ரா, கூறியதாவது. ‘‘ஒரு பக்கம், பாலியல் பற்றி அதிகமான தகவல்கள் இளைஞர்களுக்குக் கிடைக்கிறது. மறுபக்கம், பாலியல் பற்றி தெளிவான கல்வியை இளைஞர்களுக்கு அளிக்கத் தவறிவிட்டோம். பாலியல் என்பதை இலைமறை காயாகப் பேசவே நம் சமூகம் பழக்கப்பட்டிருக்கிறது. சாப்பாடு, தண்ணீர்போல பாலியல் தொடர்பும் ஓர் அடிப்படை தேவைதான். ஆனால், இதை மறைத்துவைத்துப் பூதாகரமாக்கிவிட்டார்கள். 
 
ஒரு விஷயம், சாதாரணமாகக் கிடைக்க, நாம் அதைப் பெரிதாக எடுத்துக்கொள்ள மாட்டோம். ஆனால், இதை நீ தொடவே கூடாது என மூடி வைக்கும்போது, ஆர்வம் ஏற்படும் அல்லவா? அதன் வெளிப்பாடுதான் பாலியல் பலாத்காரங்கள். பாலியல் தேவையை நம் சமூகம் வெளிப்படையாகப் பேசாததாலும், வீட்டில் கற்றுக்கொடுக்காததாலும் வன்முறைகள் அதிகரிக்கின்றன. இந்த வன்முறை புத்தி, குழந்தை என்றோ, மூதாட்டி என்றோ பார்க்காது. நம் சமுகத்தில் உடனடித் தேவை பாலியல் விழிப்பு உணர்வு’’. என்றார்.
அடுத்த கட்டுரையில்