தைப்பூச திருநாளில் வேதாரண்யேஸ்வரர் கோவிலில் நெல் கோட்டை வழங்கும் நிகழ்ச்சி..!

Mahendran

செவ்வாய், 11 பிப்ரவரி 2025 (18:15 IST)
திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி அருகே உள்ள குன்னலூர் கிராமத்தில் சுமார் 200 ஏக்கர் நிலத்தில் விவசாயிகள் விவசாயம் செய்து வருகின்றனர். அங்கு விளைந்த நெல்லை கொண்டு தினமும் வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரருக்கு நிவேத்தியம் செய்யப்படுகிறது.

இங்கு அறுவடை செய்யப்பட்ட முதல் நெல்லை ஒவ்வோர் ஆண்டும் தைப்பூசத் திருநாளில் கோட்டையாக கட்டி, வேதாரண்யேஸ்வரருக்கு சமர்ப்பிக்கும் விழா நடைபெறும். அந்த வகையில், இந்த ஆண்டும் இன்று விவசாயிகள் அறுவடை செய்த நெல்லை கோட்டையாக கட்டி, நாகை மாவட்டம் வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் கோவிலுக்கு கொண்டு செல்லப்பட்டது.

முன்னதாக, களஞ்சியம் விநாயகர் கோவில் முன்பு சிவகுமார் குருக்கள் சிறப்பு பூஜைகள் நடத்தினார். பின்னர், மேளதாளங்கள் முழங்க, முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக வேதாரண்யம் கோவிலுக்கு எடுத்து செல்லப்பட்டது.

வேதாரண்யேஸ்வரர் சன்னதி முன்பு நெல் கோட்டை வைக்கப்பட்டு, சிறப்பு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. அதன் பின்னர், பக்தர்களுக்கு நெற்கதிர்கள் பிரசாதமாக வழங்கப்பட்டது. இதை தொடர்ந்து, அந்த நெற்கதிர்கள் அரைத்து அரிசியாக்கப்பட்டு, இன்று நடைபெறும் இரண்டாம் கால பூஜையில் நிவேத்தியமாக சமர்ப்பிக்கப்படுகிறது. பின்னர், பக்தர்களுக்கும் பிரசாதமாக வழங்கப்படுகிறது.

இந்த நிகழ்வில், வேதாரண்யம் கோவில் நிர்வாகத்தினர், யாழ்ப்பாணம் வரணி ஆதீனம், செவ்வந்தி நாத பண்டாரசந்நிதி, இளையவர் சபேசன் உள்ளிட்ட பல பக்தர்கள் பங்கேற்றனர்.

Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்