செங்கோட்டையிலிருந்து சுமார் 5 கிமீ தொலைவில் திருமலை குமாரசுவாமி கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலை அடைய, பக்தர்கள் 626 படிக்கட்டுகள் ஏறிச் செல்ல வேண்டும். வழியில், இடும்பன் மற்றும் தடுவட்ட விநாயகருக்கென தனிக்கோவில்கள் உள்ளன. மேலும், கோவிலின் வடக்கு பிரகாரத்தில், தில்லைக் காளி அம்மன் இந்த தலத்தின் காவல் தெய்வமாக வீற்றிருக்கிறார்.
திருமலை குமாரசுவாமி கோவிலில் கிழக்கு நோக்கிய கருவறையில், நான்கு கரங்களுடன் அருள்பாலிக்கும் முருகப்பெருமானை தரிசிக்கலாம். வேல், சேவல் கொடி உடன் அருள்பாலிக்கும் இக்கோவில் மீது வாகன வசதியும் உள்ளது.
கோவிலின் முன் 16 படிகளை ஏறிச் சென்று வணங்கும் இடத்தில், உச்சி பிள்ளையார் அருள்புரிகிறார். இந்த 16 படிகளை ஏறி வழிபட்டால், பதினாறு பேறுகள் கிடைக்கும் என்று பக்தர்கள் நம்புகின்றனர்.
அருணகிரிநாதர், தண்டபாணி சுவாமிகள், கவிராச பண்டாரத்தையா போன்றோர், இத்தல முருகனை பாடல் பாடி போற்றியுள்ளனர். விசாக நட்சத்திரத்தினர் இத்தலத்தை வழிபட்டால் வேண்டும் வரம் கிடைக்கும் என்பது நம்பிக்கை..