மோசமான வானிலை விளைவு: மும்பை அழியும் அபாயம்!

திங்கள், 12 நவம்பர் 2012 (14:54 IST)
அதிவேக புயல், கடும் வெள்ளம், கடல் நீர் மட்டம் உயர்வு ஆகிய வானிலை மாற்றத்தினால் ஏற்படும் விளைவுகளுக்கு அழியும் அபாயம் உள்ள 20 துறைமுக நகரங்களில் இந்திய நிதித் தலைநகரமன மும்பை 6ஆம் இடத்தில் உள்ளது.

2070ஆம் ஆண்டு உத்தேசமாக 1 கோடியே 10 லட்சம் பேர் மும்பையில் வானிலை தீவிர விளைவுகளால் பாதிக்கப்படலாம் அல்லது அழிவுறலாம் என்று ஒரு ஆய்வு தெரிவித்துள்ளது.

நாசா சுற்றுச்சூழல் விஞ்ஞானி ஹான்சென் ஏற்கனவே இதனை எச்சரித்திருந்தார்.டர்பன் நகரத் துறைமுகமும் இதே ஆபத்தை எதிர்கொண்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

மும்பையின் 1 கோடியே 10 லட்சம் மக்களுக்கும் பேராபத்து காத்திருக்கிறது, மேலும் பெரிய புயல், வெள்ளம், கடல் நீர் உட்புகுதல் உள்ளிட்ட ஆபத்துகளினால் 1.3 ட்ரில்லியன் டாலர்களுக்கு மும்பையில் அழிவு ஏற்படும் என்று கூறப்பட்டுள்ளது.

இந்த ஆய்வை நடத்திய அமைப்பு பொருளாதார கூட்டுறவு மற்றும் மேம்பாடு அமைப்பு இந்த ஆய்வை மேற்கொண்டுள்ளது.

சொத்துக்கள் அளவில் மிகப்பெரிய சேதத்தை சந்திக்கும் நகரங்கள் பட்டியலில் கொல்கத்தா 4ஆம் இடத்தில் உள்ளது. சீனாவின் குவாங்சூ 2ஆம் இடத்தில் உள்ளது.

மும்பை நகரமே கான்கிரீட் காடாக மாறியுள்ளதால் மழை பெய்தாலும் அதனை பூமிக்குள் இழுத்துக்கொள்ளும் அமைப்புகள் இல்லை. இதனால் தாக்கம் கடுமையாக இருக்கும்.

கான்கிரீட் மயமானதால் சூரிய வெப்பத்தை அது உறிஞ்சிக் கொள்ளும். இதனால் நகர்ப்புறக் வெப்பத்தீவு விளைவை இது ஏற்படுத்தும். நகரத்தினுள் ஏற்படும் உஷ்ண வெப்ப நிலையினாலாலும் அதிக கான்கிரீட் ஆகாத பகுதிகளில் இருந்து வரும் சற்றே குளிர்ந்த காற்றினாலும் தீவிர வானிலை மாற்றங்களை ஏற்படுத்தி புதுப் புது நோய்களை உருஆக்கும் அபாயமும் உள்ளது.

மும்பையில் சராசரி வெப்ப நிலையின் அளவு 2 டிகிரி செல்சியஸ் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

மும்பையின் பல பகுதிகள் கடல் மட்டத்திற்கு சற்றே மேலே இருந்தாலும், உயர் கடல் அலை மட்டத்திற்குக் கீழேதான் உள்ளது. மேலும் நதிகள், கால்வாய்களின் தண்ணீர் கடலில் கலக்கும் ஒழுங்கமைப்புகள் மிகவும் சிக்கலாக்கப்பட்டு விட்டதால் கடல் நீர் உட்புகுந்து வெளியேற இடமில்லாமல் இருக்கும் ஆபத்து உள்ளது. இதனால் பெரிய உப்பு நீர் பிரளயமே தோன்றும் நிலை உள்ளதாக இந்த ஆய்வு கடுமையாக எச்சரித்துள்ளது.

"வளர்ச்சி வளர்ச்சி" என்று முட்டிக்கொள்ளும் மத்திய அரசு எதிர்காலத்தை இந்த ஆபத்தை கொண்டு யோசிக்குமா அல்லது முதலாளியத்தின் வளர்ச்சிக்கும் பூமியின் அழிவுக்கும் வித்திடுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

வெப்துனியாவைப் படிக்கவும்