சக்தி வாய்ந்த சூரிய காந்தப் புயல் இன்று பூமியைத் தாக்குகிறது

செவ்வாய், 24 ஜனவரி 2012 (15:53 IST)
சூரியனில் இருந்து வெளியாகும் சக்தி வாய்ந்த காந்தப் புயல், இன்று பூமியைத் தாக்கும் என்று அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சூரியனின் வெளிப்புறத்திலுள்ள ஒரு பகுதியில் இருந்து, அதிசக்தி வாய்ந்த வெப்ப அலைகள் வெளியாகி வருகின்றன. இந்த அலைகள், பூமியைப் பாதிக்கும் என்று கடந்த ஆறு ஆண்டுகளாக கணிக்கப்பட்டு வந்தது.

இந்தக் கணிப்பின்படி, இன்று சூரியனின் புவிகாந்தப் புயல், பூமியைத் தாக்க இருக்கிறது. குறிப்பாக, வடதுருவத்தில் இதன் பாதிப்புகளை உணரமுடியும் என்று கூறியுள்ள அமெரிக்க விஞ்ஞானிகள், வடஅமெரிக்கா, ஐரோப்பா, மற்றும் ஆசிய நாடுகளிலும் இதன் பாதிப்பை உணரலாம் என்று தெரிவித்துள்ளனர்.

சூரியனில் இருந்து சக்தி வாய்ந்த சூரிய துகள்கள், நொடிக்கு 2 ஆயிரம் கிலோ மீட்டர் வேகத்தில் பூமியை நோக்கி வருவதாக விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். இதன் காரணமாக, உயர்அலைவரிசை ரேடியோ தொலைத் தொடர்புகளை பயன்படுத்தும் விமானங்களின் சேவை பாதிக்கப்படலாம் என்று அவர்கள் கூறியுள்ளனர்.

மின் விநியோகம், செயற்கைக்கோள் பணிகளும் பாதிக்கக் கூடுமென்றும், விண்வெளியில் மிதக்கும் சர்வதேச ஆராய்ச்சி நிலையத்தில் உள்ளவர்கள், இந்த சமயத்தில் பாதுகாப்பான பகுதிக்கு சென்று விட வேண்டும் என்று விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.

கடைசியாகக் கிடைத்த தகவல்களீன் படி விண்வெளியில் மிதக்கும் சர்வதேச ஆராய்ச்சி நிலையத்தில் உள்ளவர்கள் பாதுகாப்பாக உள்ளதாக தெரிகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்