உ.பி. கிராமப்புற பத்திரிகைக்கு ஐ.நா கல்வியறிவு விருது

செவ்வாய், 4 ஆகஸ்ட் 2009 (11:18 IST)
உத்தரப்பிரதேசத்தில் முற்றிலும் பெண்களால் உருவாக்கப்பட்டு வெளியாகும் கிராமப்புற பத்திரிகைக்கு ஐ.நா.வின் கல்வியறிவு விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

உத்தரப்பிரதேசத்தின் சித்ரகூட், பான்டா மாவட்டங்களில் வெளியாகும் ‘காபர் லஹாரிய’ என்ற பத்திரிகை முற்றிலும் பெண்களால் நடத்தப்பட்டு வருகிறது. இரு வாரத்திற்கு ஒருமுறை வெளியாகும் இந்த பத்திரிகைக்கு தேவையான செய்திகளை செய்தியாளர்களாகப் பயிற்சி பெறும் பெண்கள் சேகரித்து வழங்குகின்றனர். பத்திரிகையை வினியோகம் செய்வதும் பெண்கள்தான்.

உத்தரப்பிரதேசம், புதுடெல்லியில் இயங்கி வரும் நிரன்டார் என்ற அமைப்பு சார்பில் நடத்தப்படும் இந்த பத்திரிகையில் அரசியல், குற்றம், சமூக பிரச்சனைகள், கலை, கலாசார செய்திகள் இடம்பெறுகின்றன.

கடந்த மே 2002இல் சித்ரகூட் மாவட்டத்தில் முதல் பதிப்பு துவங்கப்பட்டது. இதையடுத்து கடந்த 2006 அக்டோபரில் பான்டா மாவட்டத்தில் இதன் 2ஆம் பதிப்பு துவங்கப்பட்டது. தற்போது 40 கிராமங்களில் இந்த பத்திரிகை வெளியாகிறது.

கிராமப்புறத்தில் கல்வியறிவை மேம்படுத்தும் நோக்கத்துடன் நடத்தப்படும் இந்த பத்திரிகைக்கு ஐ.நா.வின் கல்வியறிவு விருதான கிங் சிஜோங் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்