ஆகஸ்ட் 3இல் எம்.பி.பி.எஸ். முதலாம் ஆண்டு வகுப்புகள் துவக்கம்

சனி, 1 ஆகஸ்ட் 2009 (13:16 IST)
தமிழகம் முழுவதும் அரசு மருத்துவக் கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர்ந்துள்ள முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு வரும் 3ஆம் தேதி முதல் வகுப்புகள் துவங்குகின்றன.

எனினும், நிர்வாகத் தரப்பு இடங்களை சுயநிதிக் கல்லூரிகள் நிரப்ப வேண்டியுள்ளதால், கல்லூரிகள் திறக்கும் தேதியை சுயநிதி கல்லூரி நிர்வாகங்கள் இன்னும் முடிவு செய்யவில்லை.

சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி அரங்கில் கடந்த ஜூலை 6ஆம் தேதி முதல் ஜூலை 17ஆம் தேதி வரை முதற்கட்ட கலந்தாய்வு நடைபெற்றது.

அப்போது சென்னை, செங்கல்பட்டு, வேலூர், திருச்சி, மதுரை, சேலம், கோவை உட்பட 14 அரசு மருத்துவக் கல்லூரிகளில் மொத்தம் உள்ள ஆயிரத்து 398 MBBS இடங்களுக்கு மாணவர்கள் சேர்க்கப்பட்டனர். இவர்களுக்கு வரும் 3ஆம் தேதி முதல் வகுப்புகள் துவங்குகின்றன.

மேல்மருவத்தூர் ஸ்ரீ ஆதிபராசக்தி, ஈரோடு பெருந்துறை ஐ.ஆர்.டி. உட்பட 4 சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் மொத்தமுள்ள 283 அரசு ஒதுக்கீட்டு MBBS இடங்களுக்கும் முதற்கட்ட கலந்தாய்வின் போது மாணவர்கள் சேர்க்கப்பட்ட நிலையில், நிர்வாகத் தரப்பு இடங்கள் நிரப்பப்பட உள்ளதால் முதலாம் ஆண்டு வகுப்புகள் திறக்கப்படும் தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை.

வெப்துனியாவைப் படிக்கவும்