தோனியால் ஏன் அதிக ஓவர்கள் பேட் செய்யமுடியவில்லை… சி எஸ் கே பயிற்சியாளர் பிளமிங் சொன்ன தகவல்!

vinoth

திங்கள், 22 ஏப்ரல் 2024 (07:31 IST)
ஐபிஎல் 2024 சீசன் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ள நிலையில் சி எஸ் கே  அணி மூன்றாவது இடத்தில் உள்ளது. இந்த சீசனில் தோனி எட்டாவது வீரராக களமிறங்கிய அதிரடியாக விளையாடி வருகிறார். இதுவரை 6 இன்னிங்ஸ்களில் விளையாடி 34 பந்துகளில் 87 ரன்கள் சேர்த்துள்ளார். இதுவரை அவர் அவுட் ஆகவே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது 42 வயதாகும் தோனி இந்த சீசனின் வயதான கேப்டனாக உள்ளார். இந்நிலையில் இந்த சீசனோடு அவர் ஓய்வு பெற்றுவிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் அதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை. கடந்த சீசனில் முழங்கால் பிரச்சனையால் அவதிப்பட்டார். அதனால் அவரால் அதிக நேரம் பேட் செய்ய முடியாத சூழல் ஏற்பட்டது. எல்லா இன்னிங்ஸ்களிலும் கடைசி பேட்ஸ்மேனாக களமிறங்கினார்.

இந்நிலையில் இதுகுறித்து பேசியுள்ள சி எஸ் கே அணியின் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளமிங் “தோனி அதிக ஓவர்கள் விளையாடுவதைப் பார்க்க எனக்கு ஆசைதான். ஆனால் அவர் முழங்கால் பிரச்சனையில் இருந்து இன்னும் முழுமையாக மீண்டு வரவில்லை. அதனால் தன்னுடைய ஆட்டத்தை 2 முதல் 3 ஓவர்களுக்கு சுருக்கிக் கொண்டார். பயிற்சியிலும் அவர் குறைவான நேரமே பேட் செய்கிறார். அவர் சீசன் முழுவதும் விளையாட இதுதான் சரியான முடிவாக இருக்கும்” எனக் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்