எடைகுறைப்புப் பயிற்சிகளால் வினேஷ் இறந்துவிடுவாரோ என அஞ்சினேன்… பயிற்சியாளர் பகிர்ந்த தகவல்!

vinoth

சனி, 17 ஆகஸ்ட் 2024 (08:04 IST)
பாரிஸ் ஒலிம்பிக் போட்டியின் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றிருந்த இந்திய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத எடை கூடுதலாக இருந்த காரணத்தால் தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.  50 கிலோ மல்யுத்த பிரிவில் விளையாடி வந்த அவர் இறுதிப் போட்டிக்கு முன்பாக திடீரென தகுதி நீக்கம் செய்யப்பட்ட தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அவர் உடல் எடை 50 கிலோவுக்குக் கூடுதலாக 100 கிராம் இருந்ததுதான் என சொல்லப்படுகிறது.

இதனால் இறுதிப் போட்டிக்குத் தகுதிப் பெற்றும் அவர் எந்த பதக்கமும் பெறாமல் போனது இந்திய ரசிகர்களுக்கு அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியது. இதையடுத்து அவருக்கு வெள்ளிப் பதக்கம் வழங்கப்பட வேண்டும் என சர்வதேச நீதிமன்றத்தில் இந்திய ஒலிம்பிக் சங்கம் சார்பாக வழக்குத் தொடரப்பட்டது. ஆனால் அந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

இது இந்திய ரசிகர்களுக்கு அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் அன்றைய இரவில் எடையைக் குறைக்க வினேஷ் போகத், எவ்வளவு கடுமையாக உழைத்தார் என்பது குறித்து அவரின் பயிற்சியாளர் லோவர் அகோல் தெரிவித்துள்ளார். அதில் “அரையிறுதிப் போட்டிக்கு பின்னர் அவரின் உடல் எடை 2.7 கிலோ கிராம் அதிகமாகியிருந்தது. இதனால் அவர் கிட்டத்தட்ட 80 நிமிடங்கள் தொடர்ச்சியாக பயிற்சி மேற்கொண்டார். அப்போதும் ஒன்றரை கிலோ எடை குறையவில்லை. அதன்பின்னர் 50 நிமிடங்கள் நீராவிக் குளியல் மேற்கொண்டார். ஆனால் அவர் உடலில் இருந்து வியர்வை வெளியேறவில்லை.

அதனால் தொடர்ந்து அதிகாலை 5.30 மணிவரை கடுமையானப் பயிற்சிகளை அவர் மேற்கொண்டார். பயிற்சிக்கு இடையே 2 முதல் 3 நிமிடம் அவர் ஓய்வெடுப்பார். இந்த பயிற்சியின் போது அவர் சரிந்து விழுந்தே விட்டார். அவரை எழுப்பி நீராவி குளியல் செய்யவைத்தோம். நான் மிகைப்படுத்தி எதையும் சொல்லவில்லை. ஆனால் இந்த பயிற்சிகளின் போது அவர் இறந்துவிடுவாரோ என்றே நாங்கள் அஞ்சினோம்.” எனக் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்