பாட்டி, தாத்தாவுக்கு ‘ஹாய்’ சொல்லுமா..! – பொம்மன், பெள்ளியை மகளுடன் சந்தித்த தோனி!

புதன், 10 மே 2023 (17:08 IST)
The Elephant Whisperers ஆவண குறும்படத்திற்காக ஆஸ்கர் விருது வென்ற பொம்மன், பெள்ளி தம்பதியை இன்று சிஎஸ்கே கேப்டன் தோனி நேரில் சந்தித்து பேசினார்.

இந்த ஆண்டு நடந்த ஆஸ்கர் விருது விழாவில் சிறந்த ஆவண குறும்படத்திற்காக ‘தி எலிஃபெண்ட் விஸ்பரர்ஸ்’ படம் விருதை வென்றது. முதுமலையில் யானைக்குட்டிகளை வளர்க்கும் பொம்மன், பெள்ளி என்ற பழங்குடி தம்பதியர் இந்த ஆவணப்படம் மூலம் உலகிற்கு தெரிய வந்தனர். பிரதமர் மோடி, முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பலரும் இந்த தம்பதியரை நேரில் சந்தித்தனர்.

இந்நிலையில் இன்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி ‘தி எலிஃபெண்ட் விஸ்பரர்ஸ்’ பட இயக்குனர் கர்த்திகி கொன்சாலஸ் மற்றும் பொம்மன், பெள்ளி தம்பதியரை சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் வைத்து சந்தித்துள்ளார்.



இன்று நடைபெறும் சிஎஸ்கே – டெல்லி கேப்பிட்டல்ஸ் இடையேயான போட்டிக்காக பயிற்சியில் இருந்த தோனி, பழங்குடி தம்பதியரை சந்தித்ததுடன் அவர்களுக்கு 7ம் எண் ஜெர்சியில் பொம்மன், பெள்ளி என அவர்கள் பெயரை அச்சிட்ட ஜெர்சிகளையும் அன்பளிப்பாக வழங்கியுள்ளார். அவர்கள் கூட தோனியின் மகள் ஷிவாவும் இருந்தார்.

இந்த வீடியோவை சென்னை சூப்பர் கிங்ஸ் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் தளத்தில் வெளியிட்டுள்ள நிலையில் இது ட்ரெண்டாகி வருகிறது.

Edit by Prasanth.K

Tudumm

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்