“இந்திய அணிக்கு பயிற்சியாளராக வந்தால் அரசியலும் அழுத்தமும் இருக்கும்” – ஆஸி முன்னாள் வீரருக்கு கே எல் ராகுல் அட்வைஸ்!

vinoth

வெள்ளி, 24 மே 2024 (07:28 IST)
இந்திய கிரிக்கெட் அணிக்கு மூன்று வடிவிலான போட்டிகளுக்கும் தலைமை பயிற்சியாளராக கடந்த மூன்று ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறார் ராகுல் டிராவிட். ஆனால் அவர் தலைமையில் முக்கியமான சில கோப்பை தொடர்களில் இந்திய அணி தோற்று வெளியேறியது அதிருப்தியை ஏற்படுத்தியது. சமீபத்தில் நடந்த உலகக் கோப்பை தொடரிலும் இந்திய அணி இறுதிப் போட்டியில் தோற்று மூன்றாவது முறையாகக் கோப்பையை வெல்ல இருந்த வாய்ப்பைத் தவறவிட்டது.

உலகக் கோப்பை தொடரோடு அவர் பதவி காலம் முடிந்தாலும் வரவிருக்கும் டி 20 உலகக் கோப்பை தொடர் வரை அவரின் பதவி காலம் நீட்டிக்கப்பட்டது. இப்போது ஜூன் மாதத்தோடு அவர் பணிக்காலம் முடிய இருக்கும் நிலையில் அவர் மீண்டும் விண்ணப்பிக்கப் போவதில்லை என சொல்லப்படுகிறது. இந்திய அணிக்கு புதிய பயிற்சியாளரை தேடும் பணியில் பிசிசிஐ ஈடுபட்டு வருகிறது. அதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவித்துள்ளது.

இந்த பட்டியலில் பல முன்னாள் ஜாம்பவான் வீரர்களின் பெயர்கள் அடிபடுகின்றன. ரிக்கி பாண்டிங், ஸ்டீபன் பிளமிங், கவுதம் கம்பீர், ஆஷிஷ் நெஹ்ரா ஆகியோரின் பெயர்கள் பரிசீலனையில் உள்ளன. இந்நிலையில் லக்னோ அணிக்கு பயிற்சியாளராக செயல்பட்டு வரும் ஜஸ்டீன் லாங்கரும் இந்த லிஸ்ட்டில் உள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் அவர் சமீபத்தில் அளித்த ஒரு நேர்காணலில் “இந்திய அணிக்குப் பயிற்சியாளர் ஆகும் வாய்ப்புக் கிடைத்தால் அதை யாரும் மறுக்க மாட்டார்கள். இது தொடர்பாக எங்கள் அணியின் கேப்டன் ராகுலுடன் ஒரு சிறு உரையாடல் நடந்தது. அவர் என்னிடம் ‘ஐபிஎல் அணியில் இருக்கும் அரசியலையும் அழுத்தத்தையும் விட 1000 மடங்கு இந்திய அணியில் இருக்கும்’ என்றார். அது எனக்கொரு நல்ல அறிவுரையாக படுகிறது” எனக் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்