தலையே வெடித்துவிடும் சூழலில் இப்போது நாங்கள் மாட்டிக் கொண்டிருக்கிறோம்… ஆர் சி பி கேப்டன் டூ பிளசிஸ்

vinoth

செவ்வாய், 16 ஏப்ரல் 2024 (08:04 IST)
நேற்று நடந்த ஐபிஎல் போட்டி டி 20 வரலாற்றின் மிக முக்கியமான போட்டிகளில் ஒன்றாக இடம்பிடித்தது. இந்த டாஸ் வென்று பவுலிங் தேர்வு செய்த ஆர்சிபி அணி பவர்ப்ளேவிலேயே சன்ரைசர்ஸை கட்டுப்படுத்த தவறியது. தொடர்ந்து அதிரடியாக விளையாடிய சன்ரைசர்ஸ் அணியில் ட்ராவிஸ் ஹெட் 102 ரன்களும், க்ளாசன் 67 ரன்களும் குவித்தனர். இந்த போட்டியில் 287 என்ற புதிய அதிகபட்ச ஐபிஎல் ஸ்கோர் சாதனையை சன்ரைசர்ஸ் படைத்தது. டி 20 வரலாற்றிலேயே அடிக்கப்பட்ட இரண்டாவது அதிகபட்ச ஸ்கோராகவும் இது அமைந்தது.

இதனால் ராயல் சேலஞ்சர்ஸ் அணி சேஸிங்கில் ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாட வேண்டிய சூழல். பவர்ப்ளே முடியும்போது 80 ரன்களை ஆர்சிபி நெருங்கியிருந்தபோது விராட்கோலி 42 ரன்களுக்கு அவுட் ஆனார். ஆனால் டூ ப்ளெசிஸ் நின்று விளையாடி 28 பந்துகளுக்கு 62 ரன்கள் வரை வந்தவர் அதிர்ச்சிகரமாக விக்கெட்டை இழந்தார். அதற்கடுத்து வந்த வீரர்களில் தினேஷ் கார்த்திக் மட்டும் நிலைத்து நின்று 35 பந்துகளில் 83 ரன்கள் சேர்த்தார். இதனால் அந்த அணி 7 விக்கெட்களை இழந்து 262 ரன்கள் சேர்த்து 25 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது.

இந்த தோல்விக்குப் பின்னர் பேசிய ஆர் சி பி கேப்டன் பாஃப் டு பிளசீஸ் “எங்கள் பேட்டிங்கில் கொஞ்சம் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. நாங்கள் அவர்களின் இலக்குக்கு அருகில் செல்லவேண்டுமென நினைத்தோம். ஆனால் 287 என்பது மிகப்பெரிய இலக்கு. எங்கள் பவுலர்கள் கூடுதலாக 40 ரன்கள் வரை கொடுத்துவிட்டார்கள்.பேட்ஸ்மேன்கள் பொறுப்புகளை உணர்ந்து விளையாட வேண்டும். வீரர்கள் இந்த தோல்வியால் மனதளவில் பாதிப்படையாமல் இருக்க வேண்டும். ஏனென்றால் கிரிக்கெட் மனதால் விளையாடும் விளையாட்டு. சில நேரங்களில் நமது தலையே வெடித்துவிடும் என்பது போன்ற சூழல் உருவாகும். நாங்கள் இப்போது அதுபோன்ற ஒரு சூழலில்தான் சிக்கிக் கொண்டுள்ளோம்” எனக் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்