ஓஎன்வி விருதை திருப்பி தருவதாக வைரமுத்து அறிவிப்பு

சனி, 29 மே 2021 (14:31 IST)
ஓஎன்வி இலக்கிய விருதைத் திருப்பித் தருவதாக கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார்.
 
கேரளாவின் மரியாதைக்குரிய இலக்கிய விருதுகளில் ஒன்றான ஓஎன்வி குறுப் இலக்கிய விருது பாடலாசிரியர் வைரமுத்துவுக்கு வழங்கப்பட்டதற்கு கண்டனங்கள் எழுந்த நிலையில், அதனை மறுபரிசீலனை செய்யப்போவதாக விருது ஓஎன்வி கல்சுரல் அகாதெமி தெரிவித்திருந்தது இந்நிலையில் தான் வைரமுத்து இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
 
மேலும் பரிசுத்தொகையை கேரள முதலமைச்சர் நிவாரண நிதிக்கு திருப்பி அனுவிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். ஓஎன்வி குறுப் விருது என்பது ஞானபீட விருது பெற்ற ஓஎன்வி குறுப் பெயரில் ஆண்டுதோறும் வழங்கப்பட்டுவரும் இலக்கிய விருதாகும். இந்த ஆண்டுக்கான விருது தமிழ்நாட்டைச் சேர்ந்த பாடலாசிரியர் வைரமுத்துவுக்கு அளிக்கப்பட்டது.
 
வைரமுத்து மீது பாடகி சின்மயி உள்ளிட்ட திரையுலக பிரபலங்கள் சிலர் பாலியல் சீண்டல் புகார்கள் அளித்திருந்த நிலையில்,பெருமைக்குரிய இந்த விருதை அவருக்கு அளித்தது குறித்து தமிழிலும் மலையாளத்திலும் பல்வேறு தரப்பினர் தங்கள் எதிர்ப்பை பதிவு செய்திருந்தனர்
 
இது தொடர்பாக காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளவைரமுத்து, ''காழ்ப்புணர்ச்சி கொண்ட சிலபேரின் குறுக்கீட்டினால் அந்த விருது மறுபரிசீலனைக்கு உள்ளாக்கப்படும் என்று அறிவிக்கப் பட்டிருப்பதாய் அறிகிறேன். இது என்னையும் கவிஞர் ஓ.என்.வி குரூப்பையும் சிறுமைப் படுத்துவதாகுமோ என்று சிந்தையழிகிறேன். அறிவார்ந்த நடுவர் குழுவும் இக்கட்டான சூழலுக்குத் தள்ளப்பட்டுவிடக்கூடாதே என்றும் தவிக்கிறேன்.

அதனால் சர்ச்சைகளுக்கிடையே இந்த விருதைப் பெறுவதை நான் தவிர்க்கவே விரும்புகிறேன்,''என தெரிவித்துள்ளார்.மேலும் தான் மிக மிக உண்மையாய் இருப்பதாகவும்,தன்னுடைய உண்மையை யாரும் உரசிப் பார்க்கத் தேவையில்லை என்றும் தெரிவித்துள்ளார்.''ஓ.என்.வி இலக்கிய விருது அறிவிப்பை நான் ஓ.என்.வி கல்சுரல் அகாடமிக்கே திருப்பி அளிக்கிறேன். எனக்கு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்ட பரிசுத் தொகை ரூபாய்3லட்சத்தைக் கேரள முதலமைச்சரின் நிவாரண நிதியில் சேர்த்துக்கொள்ள வேண்டுமென்று அன்போடு வேண்டுகிறேன்.
 
மற்றும் மலையாள மண்மீதும் மக்கள்மீதும் நான் கொண்டிருக்கும் அன்பின் அடையாளமாக என்னுடைய பங்குத்தொகையாக ரூபாய் 2 லட்சத்தைக் கேரள முதலமைச்சர் நிவாரண நிதிக்கு தனிப்பட்ட முறையில் நான் வழங்குகிறேன்,''என தெரிவித்துள்ளார். தமிழுக்கும் மலையாளத்துக்குமான சகோதர உறவு தழைக்கட்டும் என்று கூறியுள்ள வைரமுத்து, விருது அறிவிப்பைக் கேட்டு தன்னை பேருள்ளத்தோடு வாழ்த்திப் பெருமை செய்த தமிழ்நாட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கும்,உள்ளன்போடு வாழ்த்திய உலகத் தமிழர்களுக்கும், ஊடக உறவுகளுக்கும் நன்றி தெரிவிப்பதாக அறிக்கையில் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்