மீனவர் தலையை உரசிச்சென்ற தோட்டா - இலங்கை கடற்படை துப்பாக்கி சூடு

திங்கள், 2 ஆகஸ்ட் 2021 (13:04 IST)
தென்கிழக்கு கடல் பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த நாகை மீனவர் மீது இலங்கை கடற்படை தாக்குதல் நடத்தியதில் மீனவர் ஒருவர் காயம் அடைந்துள்ளார்.
 
நாகப்பட்டினம் கீச்சாங்குப்பம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து அக்கரைப்பேட்டையைச் சேர்ந்த கௌதமன் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் கலைச்செல்வன் உள்ளிட்ட 10 பேர் கடந்த 28ஆம் தேதி மீன்பிடிக்க கடலுக்குள் சென்றனர்.
 
வேதாரண்யம் அருகே கோடியக்கரைக்கு தென்கிழக்கே 5 நாட்டிகல் மைல் தூரத்தில் ஞாயிற்றுகிழமை மாலை மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது அந்த பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி படகில் இருந்தவர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டதாக படகில் இருந்த மீனவர்கள் தெரிவித்தனர்.
 
இதில் கலைச்செல்வன் என்பவருக்கு தலையில் இடதுபக்கம் காயம் ஏற்பட்டது. இதனால் மீனவாகள் தங்களது மீன்பிடி விசைப்படகுடன் நாகப்பட்டினம் துறைமுகத்திற்கு வந்தடைந்தனர்.
 
காயம் அடைந்த கலைச்செல்வன் நாகப்பட்டினம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவம் குறித்து நாகப்பட்டினம் மீன்வளத்துறை அலுவலகம்; மற்றும் காவல் நிலையத்தில் மீனவர்கள் புகார் அளித்துள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்