வியாழன் கிரக சுற்றுவட்டப்பாதையில் இணைந்தது ஜூனோ

Webdunia
செவ்வாய், 5 ஜூலை 2016 (18:35 IST)
அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் ஜூபிடர் ( வியாழன்) கிரகத்தை ஆராய அனுப்பிய விண்கலனான ஜுனோ, வியாழன் கிரகத்தின் சுற்றுவட்டப்பாதையில் வெற்றிகரமாக இணைந்திருக்கிறது.


 

பூமியிலிருந்து ஐந்து ஆண்டுகள் பயணித்தபின் இந்தச் சாதனையை அது படைத்திருக்கிறது.ஜூபிடரை நோக்கிப் பயணித்த அந்த கலன், சூரியக் குடும்பத்தில் மிகப்பெரிய கோளான வியாழனின் ஈர்ப்பு சக்தி மண்டலத்தால் பிடிக்கப்பட ஏதுவாக, தனது இயந்திரத்தை 35 நிமிடங்கள் வரை இயக்கி, தனது வேகத்தைக் குறைத்துக்கொண்டது. அதன் பின் அது ஜுபிடரின் ஈர்ப்பு சக்தியால் சிறைப்பிடிக்கப்பட்டு, அதன் சுற்றுவட்டப் பாதையில் இணைந்தது.

சுமார் 800 மிலியன் கிமீ தொலைவில் இந்த சாதனை நடந்ததைக் காட்டும் ஒலி சமிக்ஞைகளை ஜூனோ பூமிக்கு அனுப்பியபோது, நாசா விஞ்ஞானிகள் பெரும் ஆரவாரம் செய்தனர். ஜூனோ இந்த வாயுக் கிரகம் எப்படி உருவானது என்பதை ஆராய அந்த கிரகத்தை ஒன்றரை ஆண்டு சுற்றி வரும் வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. தனது பணி முடிந்த பின்னர் அது ஜூபிடரின் வான் சூழலில் குதித்து தன்னைத்தானே அழித்துக்கொள்ளும்.
அடுத்த கட்டுரையில்