இலங்கை தமிழர் உரிமைகளை உறுதிப்படுத்த மீண்டும் வலியுறுத்திய இந்தியா

புதன், 6 ஜனவரி 2021 (23:34 IST)
இலங்கை தமிழர்களுக்கான நீதி, சமத்துவம், கௌரவம் ஆகியவற்றை உள்ளடக்கிய தீர்வு அவர்களுக்கு கிடைப்பதை உறுதிப்படுத்த வேண்டும் என்று இந்தியா மீண்டும் வலியுறுத்தியுள்ளது.
 
இலங்கைக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், இலங்கை வெளியுறவு அமைச்சர் தினேஷ் குணவர்தனவை புதன்கிழமை சந்தித்துப் பேசினார். பிறகு இரு நாட்டு அமைச்சர்களும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.
 
இலங்கை அரசியலமைப்பின் 13வது திருத்தத்திற்கு அமைய, அர்த்தமுள்ள அதிகார பகிர்வை அமல்படுத்தும் கடப்பாட்டை அரசாங்கம் உறுதிப்படுத்த வேண்டும் என இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் கூறினார்.
 
இலங்கையின் நீண்டகால நல்லிணக்க செயற்பாடுகளையும், இனங்களுக்கு இடையிலான அமைதியையும் நிலைநாட்டி, அனைத்து மக்களையும் உள்வாங்கிய அரசியல் கொள்கையொன்றை உருவாக்க இந்தியா ஊக்குவிக்கும் என அவர் குறிப்பிட்டார்.
 
அத்துடன், ஒருமித்த நாட்டிற்குள் தமிழர்களின் அபிலாஷைகளான நீதி, அமைதி, சமத்துவம், கௌரவம் ஆகியவற்றை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என இலங்கை அரசை வலியுறுத்துவதாகவும் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் தெரிவித்தார்.
 
இதேவேளை, பரஸ்பர நம்பிக்கை, கௌரவம் ஆகியவற்றின் ஊடாக இலங்கையுடனான நல்லுறவை மேலும் வலுப்படுத்திக் கொள்வதில் இந்தியா எப்போதும் அக்கறை கொண்டு செயற்படும் என அவர் கூறினார்.

கொரோனா பரவல் தாக்கத்துக்குப் பிறகு, இந்தியாவின் பொருளாதாரம் தற்போது மீண்டு வருவதாக கூறிய அவர், அதனூடாக இலங்கைக்கு நேர்மறையான நன்மைகள் ஏற்படும் எனவும் தெரிவித்தார்.
 
பெரும்பாலான இந்திய வர்த்தகர்கள், இலங்கையில் முதலீடு செய்து குறித்து, ஆர்வம் காட்டி வருவதாகவும் ஜெய்சங்கர் குறிப்பிட்டார்.
 
இதேவேளை, கொரோனா பரவல் காரணமாக இரண்டு நாடுகளும் ஒரே விதமான சவால்களையே எதிர்நோக்கியுள்ளதாக அவர் கூறுகின்றார்.
 
இந்த பரஸ்பர ஒத்துழைப்புடன் ஒருமித்து செயலாற்றக்கூடிய வாய்ப்பை அது ஏற்படுத்தியுள்ளதாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் தெரிவிக்கின்றார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்