டெல்லிக்கு செல்லும் ஓ.பி.எஸ் ; முறியடிக்க துடிக்கும் தினகரன் தரப்பு

புதன், 15 மார்ச் 2017 (10:39 IST)
அதிமுக பொதுச்செயலாளராக சசிகலா நியமனம் செய்யப்பட்டது செல்லாது என அறிவிக்க வேண்டும் என்பதை, தேர்தல் ஆணையரிடம் வலியுறுத்த முன்னாள்  முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் இன்று காலை டெல்லி செல்கிறார்.


 

 
அதிமுக பொதுச்செயலாளராக சசிகலா நியமிக்கப்பட்டது செல்லாது என ஓ.,பி.எஸ் அணி தேர்தல் கமிஷனிடம் புகார் அளித்தது. அதையடுத்து, தேர்தல் கமிஷன் சசிகலா அடைக்கப்பட்டுள்ள பெங்களூர் சிறை முகவரிக்கு நோட்டீஸ் அனுப்பியது. அதற்கான பதில் மனு, சமீபத்தில் சசிகலாவின் சார்பில் தேர்தல் கமிஷனிடம் சமர்பிக்கப்பட்டது. 
 
அந்நிலையில் அதற்கு பதில் அறிக்கையை தாக்கல் செய்யும்படி, ஓ.பி.எஸ்-ற்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியது. எனவே, அதற்கான பதிலை 61 பக்கம் கொண்ட அறிக்கையான ஓ.பி.எஸ் அணியினர் நேற்று தாக்கல் செய்தனர். 
 
இந்நிலையில், இன்று காலை 12 மணியளவில் டெல்லிக்கு செல்லும் ஓ.பி.எஸ் அங்கு தேர்தல் ஆணையர் நஜீம் ஜைதியை அவர் சந்தித்து, அதிமுக பொதுச்செயலாளராக சசிகலா நியமனம் செய்யப்பட்டது செல்லாது எனவும், அதிமுக சட்ட விதிகளின் படி, இரட்டை இலை சின்னம் தங்கள் அணிக்கே சொந்தம் என அறிவிக்க வேண்டும் என வலியுறுத்துகிறார். அவரோடு, மைத்ரேயன் உள்ளிட்ட எம்.பி.க்களும் செல்கின்றனர்.
 
ஓ.பி.எஸ்-ஸின் திட்டத்தை முறியடிபப்தற்காக தற்போது சசிகலாவின் சகோதரர் திவகரன் மற்றும் கணவர் நடராஜன் ஆகியோர் டெல்லியில் முகாமிட்டுள்ளனர்.  தங்களுக்கு நெருக்கமான டெல்லி வாலாக்கள் மூலம், ஓ.பி.எஸ்-ன் திட்டத்தை முறியடித்து, சசிகலாவின் பொதுச்செயலர் பதவி மற்றும் இரட்டை இலை சின்னம் ஆகியவற்றை தங்கள் வசம் தக்க வைத்துக்கொள்ளும் முயற்சியில் அவர்கள் ஈடுபட்டுள்ளனர். 
 
ஏனெனில், சசிகலா நியமனம் செல்லாது என தேர்தல் கமிஷன் அறிவித்து விட்டால், தினகரனை துணைப் பொதுச்செயலாளராக நியமித்தது, ஓ.பி.எஸ் அணியினரை கட்சி மற்றும் பதவியிலிருந்து பறித்தது வரை, சசிகலாவின் எந்த நியமனமும் செல்லாமல் போய்விடும். ஓ.பி.எஸ் அணி மீண்டும் அதிமுகவை கைப்பற்ற முயலும். எனவே, அது நடந்து விடக்கூடாது என தினகரன் தரப்பு தீவிரமாக செயல்பட்டு வருகிறது. 
 
தமிழ அரசியலின் பரபரப்பு இன்று டெல்லியிலும் இன்று எதிரொலிக்க இருக்கிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்