வடகிழக்கு பருவ மழை தீவிரமடையும் - மழைராஜ்

செவ்வாய், 12 அக்டோபர் 2010 (21:14 IST)
தென்மேற்கு வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாக வாய்ப்புள்ளதால் வரும் 14ஆம் தேதி முதல் தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை தீவிரமடைய வாய்ப்புள்ளது என்று மழை குறித்து ஆய்வு மேற்கொண்டு வரும் மழைராஜ் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் அனுப்பியுள்ள செய்திக் குறிப்பு வருமாறு :

கடந்த அக்டோபர் 5ஆம் தேதி வெப்துனியாவிற்கு அனுப்பிய கடிதத்தில் 5 முதல் 10 ஆம் தேதி வரை மழை நீடிக்கும் என்றும், குறிப்பாக அக்டோபர் 5ஆம் தேதி இரவு, 8 மற்றும் 9ஆம் தேதிகளில் ஒரு சில இடங்களில் பலத்த மழை பெய்யும் எனவும் தெரிவித்திருந்ததுபோல், 5ஆம் தேதி இரவு மற்றும் 6ஆம் தேதி சென்னை, நீலகிரி, நெல்லை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும், 8ஆம் தேதி காவிரி டெல்டா மாவட்டங்கள், பெரம்பலூர் உட்பட ஒரு சில பகுதிகளிலும் பலத்த மழை பெய்தது.

இந்நிலையில் அக்டோபர் 11ஆம் தேதி கணிப்பின்படி சேலம், தருமபுரி உட்பட ஒரு சில வட மாவட்டங்களிலும், நெல்லை, கன்னியாகுமரி உள்ளிட்ட தென் மாவட்டங்களிலும் பரவலாக ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது.

தென்மேற்கு வங்கக் கடலின் தென் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகும் வாய்ப்புள்ளது. இதனால் அக்டோபர் 14ஆம் தேதி முதல் தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை தீவிரமடைய வாய்ப்புள்ளது. மேலும் தமிழகத்தில் அக்டோபர் 14 முதல் 21ஆம் தேதி வரை பலத்த மழையும் சில இடங்களில் கன மழையும் பெய்யும் வாய்ப்புள்ளது.

மழை தேதி கணிப்பின்படி அக்டோபர் 25 முதல் 30 வரை பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது. இதனால் அக்டோபர் 30ஆம் தேதிக்குள் தமிழகத்தின் பெரும்பாலான ஏரி, குளங்கள் நிரம்பும் வாய்ப்பும் உள்ளது. கேரளா, கர்நாடகா, ஆந்திராவிலும் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்