வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை - மழைராஜ்

செவ்வாய், 30 நவம்பர் 2010 (20:40 IST)
தென்மேற்கு வங்கக் கடலில் நாகையை மையமாகக் கொண்டு குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி வருவதால் 1ஆம் தேதி முதல் தமிழ்நாட்டில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாக மழை குறித்து ஆய்வு செய்துவரும் மழைராஜ் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் அனுப்பியுள்ள செய்திக் குறிப்பு வருமாறு :

கடந்த 22ஆம் தேதி வெப்துனியாவிற்கு அனுப்பிய கடிதத்தில் பாம்பனை மையமாகக் கொண்டு குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகிறது எனவும், 25 முதல் 30ஆம் தேதி வரை காவிரி டெல்டா மாவட்டங்கள், கடலூர், புதுச்சேரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பலத்த மழை பெய்யும் எனவும் தெரிவித்திருந்தது போல, கடந்த 22ஆம் தேதி இரவு முதல் ராமநாதபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பலத்த மழை பெய்தது. இதில் 27 மற்றும் 29 ஆகிய தேதிகளில் மழையின் தாக்கம் குறைந்து காணப்பட்டது.

இந்நிலையில் 30ஆம் தேதி வானிலை கணிப்பின்படி தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் நாகையை மையமாகக் கொண்டு குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகிறது. இன்று இரவு முதல் கடலூர், புதுச்சேரி உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் மிதமானது முதல் பலத்த மழை பெய்யும்.

1 முதல் 6 ஆம் தேதி வரை பெரும்பாலான நாட்கள் பலத்த மழை பெய்யும். குறிப்பாக 3 முதல் 6ஆம் தேதி வரை பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது. இதனால் கடலூர், புதுச்சேரி, விழுப்புரம், காவிரி டெல்டா மாவட்டங்கள் உள்ளிட்ட கடலோர மாவட்டங்களிலும், திண்டுக்கல், தேனி, மதுரை, நாமக்கல், ஈரோடு, தருமபுரி உள்ளிட்ட பிற பகுதிகளிலும் மிதமானது முதல் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்