11 தங்க கருடசேவை உத்ஸவம்..! பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம்.!!

Senthil Velan

ஞாயிறு, 11 பிப்ரவரி 2024 (10:19 IST)
சீர்காழி அருகே திருநாங்கூர் திவ்யதேசத்தில் 11 தங்க கருடசேவை உத்ஸவம் நடைபெற்றது. இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு பெருமாள்களை சேவித்தனர். 
 
மயிலாடுதுறை  மாவட்டம் சீர்காழியை அடுத்த திருநாங்கூர் மற்றும் அதனை சார்ந்த பகுதியில் 108 வைணவ திவ்யதேசங்கள் நாங்கூர் மணிமாடக்கோயில் ஸ்ரீ நாராயண பெருமாள், அரி மேய வின்னகரம், ஸ்ரீ குடமாடுகூத்தர், ஸ்ரீ செம்பொன்னரங்கர், ஸ்ரீ பள்ளிகொண்டபெருமாள், ஸ்ரீ வண்புருடோத்தம பெருமாள், ஸ்ரீ வைகுந்தநாதன், திருவெள்ளக்குளம் ஸ்ரீ அண்ணன் பெருமாள், திருமேணிக்கூடம் ஸ்ரீ வரதராஜ பெருமாள், கீழச்சாலை ஸ்ரீ மாதவப்பெருமாள், பார்த்தன்பள்ளி, ஸ்ரீ பார்த்தசாரதி பெருமாள், திருகாவாளம்பாடி கோபாலன் ஆகிய 11 திவ்ய தேச கோயில்கள் அமைந்துள்ளன. 
 
இங்கு ஆண்டுதோறும் தை அமாவாசைக்கு மறுநாள் பிரசித்தி பெற்ற 11 தங்க கருடசேவை உத்ஸவம் நடைபெருவது வழக்கம். இவ்வாண்டு கருட சேவை உத்ஸவம் வெகு விமர்சையாக நடைபெற்றது. 
 
கருட சேவையை முன்னிட்டு திருநகரி ஸ்ரீ கல்யாண ரெங்கநாதர் கோயிலில் இருந்து திருமங்கை ஆழ்வார் புறப்பட்டு 11 திவ்ய தேசங்களுக்கு சென்று கருடசேவைக்கு வருமாறு பெருமாள்களை அழைப்பார். 
 
அவரது அழைப்பை ஏற்று 11 பெருமாள்களும் தங்களது கோயில்களில் இருந்து புறப்பட்டு நாங்கூர் மணிமாடக்கோயிலுக்கு  மாலை எழுந்தருளினர். அவர்களை திருமங்கையாழ்வார் வரவேற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. 
 
பின்னர் 11 பெருமாள்களும் கோயில் மண்டபத்தில் எழுந்தருள சிறப்பு திருமஞ்சணம் நடைபெற்றது. இரவு 12:00 மணிக்கு மணிமாடக்கோயில் ராஜகோபுரவாயிலில் மணவாள மாமுணிகளும், ஹம்ஸ வாகனத்தில் குமுத வள்ளி தாயாருடன் திருமங்கை ஆழ்வாரும் எழுந்தருளினர். 
 
தொடர்ந்து அங்கு 11 பெருமாள்களும் ஒருவர் பின் ஒருவராக தங்க கருடவாகனத்தில் எழுந்தருளினர். அவர்களுக்கு திருமங்கை ஆழ்வார் மங்களா சாசனம் செய்யும் நிகழ்வு நடைபெற்று. கும்ப தீப ஆரத்தி எடுக்கப்பட்டு, தங்க கருட சேவை உற்சவம் நடைபெற்றது. 
 
அப்போது அங்கு கூடியிருந்த பக்தர்கள் அனைவரும் திருமங்கை ஆழ்வார் அருளிய பாசுரங்களை பாடினர். தொடர்ந்து இரவு 2:30மணிக்கு, 11 பெருமாள்களும் தங்க கருட வாகனத்தில் வீதியுலா காட்சி நடைபெற்றது.   

ALSO READ: அ.தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க. பா.ம.க..? எத்தனை தொகுதிகள்..!!
 
பல்வேறு மாவட்டங்களில் இருந்து திரளான பக்தர்கள் கலந்துகொண்டு 11 பெருமாள்களை மனமுருக சேவித்தனர். விழாவை முன்னிட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மீனா  தலைமையில் 200க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்