திருமங்கலம் வன்முறை: அ.இ.அ.தி.மு.க மீது ஸ்டாலின் புகார்

திங்கள், 29 டிசம்பர் 2008 (09:50 IST)
மதுரை மாவட்டம் திருமங்கலம் சட்டப்பேரவைத் தொகுதியில் வன்முறையைத் தூண்டிவிட்டு, இடைத்தேர்தலை நிறுத்தி வைப்பதற்கு அ.இ.அ.தி.மு.க முயற்சிப்பதாக உள்ளாட்சித் துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியிருக்கிறார்.

திருமங்கலத்தில் இன்று தி.மு.க தேர்தல் பணிக்குழு தலைவர் மு.க.அழகிரியுடன் ஆலோசனை நடத்திய பின் செய்தியாளர்களுக்கு அவர் பேட்டியளித்தார்.

அ.இ.அ.தி.மு.க.வினர் திருமங்கலத்தில் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதாகக் கூறி அக்கட்சியினருக்கும், தி.மு.க-வினருவுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது குறித்தும், பணம் கொடுத்தது பற்றியும் தேர்தல் ஆணையத்திடம் புகார் தெரிவித்திருப்பதாக ஸ்டாலின் தெரிவித்தார்.

தேர்தல் விதிமுறைகளை மீறி அ.இ.அ.தி.மு.க செயல்படுவதாகக் குற்றம்சாட்டிய அவர், தோல்வி பயத்தால் அ.இ.அ.தி.மு.க.வினர் இதுபோன்று செயல்படுகின்றனர் என்றார்.

திருமங்கலம் தொகுதியில் கலவரத்தை தூண்ட சதி செய்து தேர்தலை நிறுத்த அ.இ.அ.தி.மு.க.வினர் முய‌ற்‌‌சி செய்வதாகவும், அதற்கு தி.மு.க ஒருபோதும் இடமளிக்காது என்றும் கூறினார்.

அ.இ.அ.தி.மு.க.வினரிடன் சதியையும் மீறி திருமங்கலத்தில் தி.மு.க வெற்றிபெறும் என்றும் ஸ்டாலின் நம்பிக்கை தெரிவித்தார்.

வெப்துனியாவைப் படிக்கவும்