சென்னை ஆல்பர்ட் தியேட்டரில் காலவதியான உணவுகள் விற்கப்பட்டதன் எதிரொலியாக சென்னையில் உள்ள திரையரங்குகளில் சோதனை நடத்தப்பட உள்ளது.
சென்னையில் புகழ்பெற்ற பழமை வாய்ந்த தியேட்டர்களில் எக்மோர் ஆல்பர்ட் தியேட்டரும் ஒன்று. சமீபத்தில் இந்த தியேட்டரில் படம் பார்க்க வந்த ஒருவர் கேண்டீனில் பாப்கார்ன் உள்ளிட்ட பொருட்கள் வாங்கியபோது அவை காலாவதி தேதியை தாண்டியிருந்தன. இதுகுறித்து அவர் கேள்வி எழுப்பியபோது கேண்டீன் உரிமையாளருடன் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி சதீஷ் தலைமையிலான குழுவினர் ஆல்பர்ட் திரையரங்க கேண்டீனை சோதனை செய்தபோது ஏராளமான காலாவதியான குளிர்பானங்கள், உணவுப்பொருட்களை கைப்பற்றி பறிமுதல் செய்தனர். மேலும் கேண்டீன் உரிமையாளரின் லைசென்ஸும் ரத்து செய்யப்பட்டது.
இந்த சம்பவத்தின் எதிரொலியாக சென்னை முழுவதும் உள்ள ஷாப்பிங் மால்கள், திரையரங்க கேண்டீன்களில் சோதனை நடத்த உள்ளதாக உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி சதீஷ் தெரிவித்துள்ளார்.
Edit by Prasanth.K