திருமாவளவனை கைது செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ள காங்கிரஸ்சாரின் உணர்வை குறைத்து மதிப்பிட முடியாது என்று கூறிய தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.வி.தங்கபாலு, காங்கிரஸ் கட்சி விவகாரங்கள் பற்றி பேச திருமாவளவனுக்கு அருகதை இல்லை என்றார்.
webdunia photo
FILE
சென்னை சத்திய மூர்த்தி பவனில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், தேனி மாவட்டத்தில் நடந்த செயல்வீரர்கள் கூட்டத்தில் பங்கேற்று இருந்தபோது காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி, பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோருடைய உருவ பொம்மைகளை பெரியார் திராவிடர் கழகத்தினர் எரித்துள்ளனர். இதுபற்றி கேட்க சென்ற காங்கிரசாரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அடுத்த ஒரு மணி நேரத்தில் அலுவலகத்தில் காங்கிரசார் யாரும் இல்லாத நேரத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கற்களை வீசியும், இங்குள்ள நண்பர்களை அடித்தும் வன்முறை நிகழ்த்தியுள்ளனர்.
இது பற்றி திருமாவளவன் என்னிடம் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது அவருடைய கட்சியினர் தாக்குதலில் ஈடுபடவில்லை என்று கூறினார். நான் அவரிடம் வீடியோவில் பதிவாகி இருக்கும் காட்சிகளை பார்த்து விட்டு சொல்லுங்கள் என்றேன். காங்கிரஸ்காரர்கள் தாக்கியதாக கூறினார். காங்கிரஸ்காரர்கள் யாரையும் தாக்க மாட்டார்கள். நடந்த சம்பவத்துக்காக திருமாவளவன் என்னிடம் வருத்தம் தெரிவித்து கொண்டார்.
இந்த சம்பவம் குழப்பத்தை ஏற்படுத்த வேறு கட்சியினரால் தூண்டிவிடப்பட்ட செயல் என்று திருமாவளவன் சொல்லி இருக்கிறார். காங்கிரஸ் கட்சி விவகாரங்கள் பற்றி பேச திருமாவளவனுக்கு அருகதை இல்லை. ஒரு கட்சி அலுவலகத்தில் மாற்று கட்சியினர் நுழைவது நல்ல பண்பு அல்ல.
சோனியாகாந்தியின் உருவ பொம்மை எரிக்கப்பட்ட போது காவல்துறையினர் வேடிக்கை பார்த்துள்ளனர். இதனால் தமிழகம் முழுவதும் காங்கிரசார் கொந்தளித்துள்ளனர். ஆங்காங்கே ஆர்ப்பாட்டம் நடத்தி வருகிறார்கள். தமிழக காங்கிரஸ் கமிட்டி உரிய முறையில் இப்பிரச்சனையை கையாளும். காங்கிரசார் யாரும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன்.
தமிழ்நாடு முழுவதும் காங்கிரஸ் தொண்டர்கள் திருமாவளவனை கைது செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகிறார்கள். அவர்களின் உணர்வை குறைத்து மதிப்பிட முடியாது. தமிழகத்தில் சட்டத்தின் ஆட்சி நடக்க வேண்டும் என்று விரும்புகிறோம். எங்கள் தயவில் ஆட்சி நடக்கும் மாநிலத்தில் சோனியாவுக்கு ஏற்பட்ட இழிவு செயலை நினைத்து வருந்துகிறோம்.
ஆயினும், காங்கிரஸ் கட்சி எப்போதுமே கூட்டணி தர்மத்தை காக்கும் கட்சி. அதனடிப்படையில் திருமங்கலத்தில் நடைபெறும் இடைத்தேர்தலில் தி.மு.க வேட்பாளரை காங்கிரஸ் ஆதரிக்கும். இதற்காக என்.எஸ்.வி.சித்தன் எம்பி தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது என்று தங்கபாலு கூறினார்.