தமிழகத்தில் மாலை 6 மணிக்கு மேல் மின் தடை : மின்சார வாரியம்!

புதன், 27 ஆகஸ்ட் 2008 (11:36 IST)
மத்திய மின் தொகுப்பிலிருந்து பெறப்படுகின்ற மின் அளவு கணிசமாக குறைந்ததாலும், தனியார் மின் உற்பத்தி நிலையங்களிலிருந்து பெறப்படும் மின் அளவும் குறைந்ததாலும், மாலை 6 மணிக்கு மேலும் மின்தடை செய்யவேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதஎன்றமின்சார வாரியம் அறிவித்துள்ளது.

இது தொடர்பாக தமிழ்நாடு மின்சார வாரியத்தின் தலைமை பொதுமக்கள் தொடர்பு அதிகாரி வெளியிட்ட செய்திக்குறிப்பில், ''தமிழ்நாடு அரசின் அறிவுரையின்படி தமிழக மின்வாரியம் மின்விநியோகத்தை நிர்வகிப்பதற்கு 21.7.08 முதல் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

தொழிற்சாலைகளுக்கு வாராந்திர விடுமுறையை சுழற்சி முறையில் மாற்றியமைத்தும், விவசாயிகளுக்கான மின்சாரத்தை வாரத்திற்கு இருமுறை கட்டுப்படுத்தியும் மாநகர மற்றும் நகர மின்நுகர்வோர்களுக்கு மின்சாரம் வழங்கும் நேரத்தினை நாள் ஒன்றுக்கு ஒரு மணி நேரம் குறைத்தும், மின்விநியோகத்தின் தேவையை முறைப்படுத்த முடிந்தது. இக்கட்டுப்பாடுகளை அவ்வப்போது மின்நிலைமையை கருத்தில் கொண்டு ஆங்காங்கே தமிழ்நாடு மின்சார வாரியம் தளர்த்தி வந்தது.

ஆனால், கடந்த இரண்டு தினங்களாக காற்றாலைகளிலிருந்து பெறப்படும் மின் அளவு 1,500 மெகாவாட்டிலிருந்து 450 மெகா வாட்டாக குறைந்ததாலும், மத்திய மின் தொகுப்பிலிருந்து பெறப்படுகின்ற மின் அளவு கணிசமாக குறைந்ததாலும், தனியார் மின் உற்பத்தி நிலையங்களிலிருந்து பெறப்படும் மின் அளவும் குறைந்ததாலும், மாலை 6 மணிக்கு மேலும் மின்தடை செய்யவேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இதை முன்கூட்டியே கணிக்க இயலாது.

தமிழகத்தில் மின்நிலைமை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. திட்டமிட்டு பராமரிப்புக்கு எடுக்கப்பட்டுள்ள ஒரே ஒரு மின்நிலைய அலகினைத்தவிர தமிழக மின்வாரியத்திலுள்ள மின்உற்பத்தி நிலையங்கள் அனைத்துமே முழுத்திறனுக்கு இயக்கப்பட்டு வருகின்றன.

எனவே, காற்றாலையிலிருந்து பெறப்படும் மின்சாரத்தின் அளவு அதிகரித்து தனியார் மற்றும் மத்திய தொகுப்பிலிருந்து கூடுதலாக மின்சாரம் பெறப்படும் போது மின்நிலைமை சீராகும் என எதிர்பார்க்கப்படுகிறது'' எ‌ன்று கூற‌ப்ப‌ட்டு‌ள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்