சிங்கம்புணரியில் ஆர்ப்பாட்டம்: ஜெயலலிதா அறிவிப்பு!
புதன், 20 ஆகஸ்ட் 2008 (14:28 IST)
சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி பேரூராட்சி நிர்வாகத்தைக் கண்டித்து அ.இ.அ.தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்," ராமநாதபுரம் கூட்டுக் குடிநீர்த் திட்டத்தில் சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த சிங்கம்புணரி பேரூராட்சி, மரிதிப்பட்டி, எஸ்.வி.மங்கலம், காலாப்பூர், சிவபுரிபட்டி, முறையூர், சூரக்குடி, கண்ணமங்கலம் பட்டி, வகுத்தெளுந்துவன் பட்டி ஆகிய ஊராட்சிப் பகுதிகள் சேர்க்கப்பட வேண்டும்.
மக்களின் விருப்பத்தை நிறைவேற்றும் விதமாக இந்த பகுதிகளையும் ராமநாதபுரம் கூட்டுக் குடிநீர்த் திட்டத்தின் கீழ் கொண்டுவர அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியும், சிங்கம்புணரி பேரூராட்சி பகுதியில் வசிக்கும் ஏழை, எளிய, நடுத்தர மக்களின் வீடுகள், தொழில் நிறுவனங்கள், தொழிற்சாலைகள் ஆகியவற்றின் மீதான வரியை உயர்த்தியுள்ள பேரூராட்சி நிர்வாகத்தைக் கண்டித்தும், அதனை உடனடியாக திரும்பப் பெற வலியுறுத்தியும், அ.இ.அ.தி.மு.க சிவகங்கை மாவட்டக் கழகத்தின் சார்பில் வரும் 22ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 10 மணி அளவில் சிங்கம்புணரி பேரூராட்சி பேருந்து நிலையம் அருகில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்" என்று கூறப்பட்டுள்ளது.