எந்த அரசும் ஆதார் அட்டை கட்டாயம் என வலியுறுத்த கூடாது!

திங்கள், 23 செப்டம்பர் 2013 (17:08 IST)
FILE
முக்கிய பொதுச் சேவைகளுக்கு கூட ஆதார் அடையாள அட்டை கட்டாயம் என மாநில அரசுகள் வலியுறுத்தி வரும் நிலையில், அத்தியாவசிய அரசு சேவைகளை பெறுவதற்கு ஆதார் அட்டை கட்டாயமல்ல என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக ஓய்வுபெற்ற கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி கே.எஸ். புட்டாசாமி உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பொதுநலன் மனுவில்,

"ஆதார் அட்டை திட்டம், மக்கள் தாமாகவே முன்வந்து தங்களைப்பற்றிய விவரங்களை பதிவு செய்யும் திட்டம் என அரசு கூறினாலும், திருமணப்பதிவு உள்ளிட்ட இதர சேவைகளுக்கு மாநில அரசுகள் ஆதார் அட்டையை கட்டாயமாக கோருகின்றன. மகாராஷ்ட்ரா அரசு கூட சமீபத்தில் ஆதார் அடையாள அட்டை இல்லாதவர்களின் திருமணம் பதிவு செய்யப்படாது என அறிவித்துள்ளது.

இது அரசியல் சாசனத்தின் 14 ஆவது பிரிவு ( சம உரிமை) மற்றும் 21 ஆவது பிரிவு ( சுதந்திர வாழ்க்கைக்கான உரிமை) களுக்கு எதிரானது. எனவே ஆதார் அட்டை திட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும்" என கூறப்பட்டிருந்தது.

இந்த மனுவை இன்று விசாரித்த உச்ச நீதிமன்றம், அத்தியாவசிய தேவைகளை அளிப்பதற்கு பொதுமக்களிடம் மத்திய, மாநில அரசுகள் ஆதார் அடையாள கட்டாயம் வேண்டும் என வலியுறுத்தக் கூடாது என உத்தரவிட்டது.

மேலும் சட்டவிரோதமாக இந்தியாவில் குடியேறியவர்களுக்கு மத்திய, மாநில அரசுகள் ஆதார் அட்டையை வழங்கக்கூடாது என்றும் நீதிமன்றம் தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளது.

ஆதார் அட்டையை ரத்து செய்ய வேண்டும் என்று கோரியிருப்பது குறித்து விசாரிக்கப்படும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

நாடு முழுவதும் உள்ள அனைத்து குடிமகன்களுக்கும் ஆதார் அட்டை வழங்க மத்திய அரசு ரூ.50 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து அதற்கான பணிகள் நடந்து வரும் நிலையில், உச்ச நீதிமன்றம் இவ்வாறு உத்தரவிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்