ஹசாரே குழுவினரை சந்திக்க ராகுல் மறுப்பு!

செவ்வாய், 18 அக்டோபர் 2011 (19:18 IST)
அன்னா ஹசாரே கிராமத்திலிருந்து தம்மை சந்திக்க வந்த குழுவினரை காங்கிரஸ் பொதுச் செயலர் ராகுல் காந்தி சந்திக்க மறுத்துவிட்டதால் அவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர்.

அன்னா ஹசாரேவின் ராலேகான் சித்தி கிராமத்தை சேர்ந்த ஒரு குழுவினர் அக்கிராம தலைவர் ஜெய்சிங் ராவ் மபாரே தலைமையில் ராகுல் காந்தியை சந்திக்க நேரம் ஒதுக்க கோரியிருந்தனர்.

அவர்களுக்கு அக்டோபர் 18 ஆம் தேதி (இன்று) ராகுலை சந்திக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதை நம்பி ஹசாரே கிராமத்தை சேர்ந்த குழுவினர் இன்று டெல்லி சென்றனர்.

ஆனால் அவ்வாறு ராகுலை சந்திக்க முன்அனுமதி எதுவும் வழங்கப்படவில்லை என ராகுல் காந்தி அலுவலகத்தில் தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து அவர்கள் ஏமாற்றத்துடன் தங்களது கிராமத்திகு திரும்பினர்.

பின்னர் அவர்கள் இது குறித்து இந்த சந்திப்புக்கு ஏற்பாடு செய்த காங்கிரஸ் எம்.பி. தாமஸைத் தொடர்புகொண்டு கேட்டபோது, அவ்வாறு ராகுலை சந்திக்க கூட்டம் எதுவும் ஏற்பாடு செய்யப்படவில்லை என்று முதலில் கூறியுள்ளார்.

பின்னர் இதில் தவறு நிகழ்ந்ததை ஒப்புக்கொண்டு மன்னிப்பு கேட்டார். இதுகுறித்து ராலேகான் சித்தி குழுவினருக்கு விளக்கியதாகவும் அவர் தெரிவித்தார்.

இதனிடையே ராகுலை சந்திக்க முடியாமல் அவமதிக்கப்பட்ட ராலேகான் சித்தி கிராமத் தலைவர் ஜெய்சிங் ராவ் மபாரி கூறுகையில், எங்கள் குழுவினரை இழிவுபடுத்திவிட்டனர். எனவே ராகுல்காந்தியை நாங்கள் சந்திக்க மாட்டோம் என்றார்.

எனினும் ஹசாரே போராட்டம் நடத்திய ஜன்லோக்பால் மசோதா தொடர்பாக ராகுலை சந்திக்க நாங்கள் அனுமதி கேட்கவில்லை என அக்குழுவை சேர்ந்த பதாரே என்பவர் குறிப்பிட்டார்

வெப்துனியாவைப் படிக்கவும்