சூர்ய கிரண் விமான விபத்து; விமானி பலி

புதன், 21 ஜனவரி 2009 (12:30 IST)
கர்நாடக மாநிலம் பிதார் என்ற இடத்திற்கு அருகே இந்திய விமானப்படையின் பயிற்சி விமானம் சூர்ய கிரண் விழுந்து விபத்துக்குள்ளானதில், விமானி உயிரிழந்தார்.

சூர்யகிரண் விமான பயிற்சியில் அண்மையில் இணைந்தவர் விங் கமாண்டர் தாலிவால். இவர் கிரண் எம்கே-2 ரக விமானத்தில் இன்று காலை பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது, அந்த விமானம் விபத்துக்குள்ளானதாகவும், இதில் விமானி தாலிவால் உயிரிழந்ததாகவும் விமானப்படை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பிதார் விமான தளத்தில் இருந்து இந்த விமானம் புறப்பட்டதாகவும், சில நிமிடங்களில் விமானப்படை நிலையத்திற்கு அருகே சிதறி விழுந்ததாகவும் அந்த வட்டாரங்கள் கூறின.

இந்த விபத்து குறித்து விசாரணை நடத்த விமானப்படை தலைமை அலுவலகம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 6 ஆண்டுகளில் சூர்ய கிரண் பயிற்சி விமானம் விபத்துக்குள்ளாகி இருப்பது இரண்டாவது முறையாகும். கடந்த 2006ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் இதே விமான தளத்தில் இருந்து புறப்பட்ட சூர்ய கிரண் விமானம் விபத்துக்குள்ளானதில், 2 விமானிகள் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்