நாகை - இலங்கை கப்பல் போக்குவரத்து மீண்டும் தொடங்கியுள்ள நிலையில், பயணிகளை ஈர்ப்பதற்காக கட்டணக் குறைப்பு மற்றும் காலை, மதிய உணவுகள் இலவசம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது, வானிலை சீரடைந்து, தொழில்நுட்ப அணியின் அனுமதி கிடைத்ததின் அடிப்படையில், இன்று நாகை துறைமுகத்திலிருந்து இலங்கை காங்கேசன் துறைக்கான கப்பல் போக்குவரத்து மீண்டும் தொடங்கியது.
இன்று காலை 6 மணிக்கு, துறைமுகம் வந்த பயணிகள் சோதனைக்கு பிறகு கப்பலில் அனுமதிக்கப்பட்டனர். பயணிகளை வரவேற்கும் விதமாக, கப்பல் நிர்வாகத்தினர் ரோஜா பூ வழங்கினர்.
பயணிகளை மேலும் ஈர்க்கும் வகையில், இலங்கைக்கு செல்வதற்கான கட்டணம் ரூ.4,250 ஆக குறைக்கப்பட்டுள்ளது. அத்துடன், கப்பலில் செல்லும் பயணிகளுக்கு காலை மற்றும் மதிய உணவுகள் இலவசமாக வழங்கப்படும். மேலும், ஒவ்வொரு பயணிக்கும் 10 கிலோ வரை பொருட்களை இலவசமாக எடுத்துச் செல்ல அனுமதி அளிக்கப்படுகிறது. கூடுதலாக எடுக்கும் ஒவ்வொரு கிலோக்கும் ரூ.50 கட்டணம் வசூலிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.