முன்கூட்டியே தேர்தல்: ராஜசேகர ரெட்டி!

செவ்வாய், 11 நவம்பர் 2008 (10:31 IST)
ஆந்திர மாநிலத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் முன்கூட்டியே நடத்தப்படலாம் என்று அம்மாநில முதல்வர் ஒய்.எஸ். ராஜசேகர ரெட்டி சூசகமாகத் தெரிவித்துள்ளார்.

ஹைதராபாத்தில் நேற்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் பேசிய ராஜசேகர ரெட்டி, எந்த நேரத்திலும் தேர்தல் நடைபெறலாம் என்பதால் தேர்தலுக்குத் தயாராகுமாறு அமைச்சர்களைக் கேட்டுக் கொண்டார்.

சமீபகாலமாக மக்களவைத் தேர்தல் முன்கூட்டியே நடைபெறலாம் என்று தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில், ராஜசேகர ரெட்டி இவ்வாறு கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த ஆண்டு மே மாத வரை மத்திய அரசின் பதவிக்காலம் உள்ள போதிலும், பிப்ரவரி மாதத்திலேயே மக்களவைத் தேர்தலை நடத்த ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு முடிவு செய்திருப்பதாக செய்திகள் வெளியாகி வருகின்றன.

தற்போது 6 மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல்கள் நடைபெற்று வரும் நிலையில், அந்தப் பணிகள் முற்றிலுமாக நிறைவடைந்த பின்னரே மக்களவைத் தேர்தல் தேதி பற்றி அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் ராஜசேகர ரெட்டி கூறினார்.

மக்களவைத் தேர்தலோடு ஆந்திர மாநில சட்டப்பேரவைத் தேர்தலும் நடைபெறும்.

வெப்துனியாவைப் படிக்கவும்