இந்திய படைகள் மீது பாக். ராணுவம் அத்துமீறி தாக்குதல்!

வெள்ளி, 15 ஆகஸ்ட் 2008 (17:28 IST)
நாட்டின் 62வது சுதந்திர தினம் இன்று விமரிசையாக கொண்டாடப்படும் நிலையில், பாகிஸ்தான் ராணுவம் இந்திய நிலைகள் மீது அத்துமீறி தாக்குதல் நடத்தியுள்ளது.

ஜம்மு-காஷ்மீரில் உள்ள சர்வதேச எல்லைப் பகுதிகளான ஆர்.எஸ்.புரா மற்றும் பூஞ்ச் செக்டரிலுள்ள மாண்டி ஆகிய இடங்களில் உள்ள இந்திய ராணுவம் மற்றும் எல்லைப் பாதுகாப்புப் படையினரின் நிலைகள் மீது பாகிஸ்தான் ராணுவம் ராக்கெட் மற்றும் பீரங்கி மூலம் தாக்குதல் நடத்தியுள்ளது.

சுமார் ஒரு மணி நேரத்துக்குள் 2 இடங்களில் இத்தாக்குதல் நடத்தப்பட்டதாக இந்திய ராணுவ வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் எல்லைப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

சமீபகாலமாக பாகிஸ்தான் ராணுவம் இந்திய எல்லைக்குள் அத்துமீறி தாக்குதல் நடத்தி வருவதற்கு, இந்தியா ஏற்கனவே கண்டனம் தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்