சோம்நாத் நீக்கம் துரதிர்ஷ்டவசமானது: காரத்

ஞாயிறு, 3 ஆகஸ்ட் 2008 (14:58 IST)
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒழுங்கு நடவடிக்கையின் அடிப்படையிலேயே மக்களவைத் தலைவர் சோம்நாத் சாட்டர்ஜியை கட்சியில் இருந்து நீக்க வேண்டியதாயிற்று என்றும், அந்த நிகழ்வு துரதிர்ஷ்டவசமானது என்றும் கட்சியின் பொதுச் செயலாளர் பிரகாஷ் காரத் கூறியிருக்கிறார்.

திருவனந்தபுரத்தில் கைரளி தொலைக்காட்சிக்கு அவர் அளித்த பேட்டியில், இதுமாதிரியான ஒரு சூழ்நிலை முன்பு ஏற்பட்டதில்லை என்றும், பதவி விலகுமாறு கட்சி கேட்டுக்கொண்ட பிறகும் சோம்நாத் சாட்டர்ஜி மறுத்து விட்டதாலேயே அவரை நீக்க வேண்டியதாயிற்று என்றும் கூறினார்.

சோம்நாத் சாட்டர்ஜி போன்ற மரியாதைக்குரிய ஒருவருக்கு இந்த சூழ்நிலை ஏற்பட்டது துரதிர்ஷ்டவசமானது என்றும் காரத் குறிப்பிட்டார்.

என்றாலும் சோம்நாத் நீக்கத்தால், மேற்கு வங்க மாநிலத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்குள் எந்தவித பிரிவினையும் இல்லை என்றார் அவர்.

மக்களவைத் தலைவர் பதவிக்கு உரிய மரியாதையை நாங்கள் அளிக்கும அதே நேரத்தில், அவரது பதவிக்கு கவுரவத்தை குறைக்கும் எந்த செயலையும் செய்ய விரும்பவில்லை என்று அவர் தெரிவித்தார்.

பிளவு அல்லது தகுதி நீக்கம் என்ற கேள்விக்கே இடமில்லை என்று கூறிய காரத், தங்களைப் பொருத்தவரை இது ஒரு நேரடியான செயல் என்றார்.

மக்களவைத் தலைவர் பதவியில் தொடர்வது என்பது சோம்நாத்தின் முடிவு என்றும், கட்சியின் உறுப்பினர் பதவியில் இருந்து நீக்குவது மட்டுமே கட்சி எடுத்த நடவடிக்கை என்றும் காரத் தெளிவுபடுத்தினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்